உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை சந்தித்தது.
அரையிறுதி ஆட்டம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்களாக பிரித்து நடத்தப்பட்டது. மழை காரணமாக மோசமாக இருந்த ஆடுகளத்தில், இந்திய டாப் ஆர்டர் சரிந்தது.
தோனி ரன் அவுட்
கடைசி நேரத்தில் தோனி, ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். அப்போது 49வது ஓவரில் தோனி ரன் அவுட் ஆனார். அத்துடன் அனைவரும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையை இழந்தனர்.
கண்ணீரை அடக்க முயற்சித்தேன்
தோனி ஆட்டமிழந்த பின் என்ன நடந்தது என சாஹல் கூறினார். "அது தான் என் முதல் உலகக்கோப்பை. தோனி ஆட்டமிழந்த பின் நான் பேட்டிங் ஆடச் சென்றேன். என் கண்ணீரை அடக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன்"
மழை பாதிப்பு
"அது மிகவும் மன அழுத்தமானதாக இருந்தது. நாங்கள் 9 போட்டிகளில் நன்றாக ஆடினோம் திடீரென நாங்கள் தொடரை விட்டு வெளியேறினோம். மழை எங்கள் கைகளில் இல்லை. எதைப் பற்றி பேசுவதும் சரியாக இருக்காது"
வீரர்கள் மனநிலை
"அப்போது தான் முதன் முறையாக நாங்கள் மைதானத்தை விட்டு வெளியேறி, விரைவாக ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என நினைத்தோம்" என்று அன்று நடந்த சம்பவத்தை விவரித்தார் சாஹல்.
உலகக்கோப்பை கனவு
மேலும், "நான் 5 - 6 ஆண்டுகள் ஆட விரும்புகிறேன். ஒரு உலகக்கோப்பையாவது வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்-இல் வெற்றி பெற்று இருக்கிறோம். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையும் வென்றால் அனைத்து விமர்சனமும் அடங்கி விடும்" என்றார்.
வாய்ப்பு கொடுக்காத கோலி
உலகக்கோப்பை தொடருக்கு பின் சாஹல் அணியில் சரியாக வாய்ப்பு பெறவில்லை என்பதே உண்மை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் தான் சாஹல் வாய்ப்பு பெற்றார்.
தென்னாப்பிரிக்கா தொடர் நீக்கம்
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் சாஹல் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருடன் ஜோடியாக சுழற் பந்து வீசும் குல்தீப் யாதவும் ஒருநாள் - டி20 அணிகளில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி விடுப்பு
அதே போல, உலகக்கோப்பைக்கு பின் தோனி இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். நவம்பர் வரை அவர் விடுப்பில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.