அதே போல நீக்குங்கள்
தோனி எப்படி இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களை யோசிக்காமல் அணியில் இருந்து நீக்கினாரோ, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர அவர்களை ஒதுக்கினாரோ, அதே போல அவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
வீழ்ந்த ஜாம்பவான்கள்
தோனி கேப்டனாக இருந்த போது தான் கிட்டத்தட்ட இந்திய அணியின் அனைத்து ஜாம்பவான் வீரர்களும் ஓய்வு பெற்றனர். அதில் பல ஓய்வு முடிவுகள் சர்ச்சையை கிளப்பியது. சச்சின், கங்குலி, லக்ஷ்மன், டிராவிட், சேவாக் என அந்த நீண்ட பட்டியலில் பலரும் தொடர்ந்து போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருந்தும் அணியில் புறக்கணிக்கப்பட்டனர். கம்பீரின் நிலை அதை விட மோசமானது.
தோனியின் வளர்ச்சி
தோனி ஒரு வீரராக 2005, 2006ஆம் ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்தார். உலகின் அதிரடி பேட்ஸ்மேன் என்ற பெயரை சில போட்டிகளிலேயே பெற்றார். எனினும், 2007 டி20 உலகக்கோப்பை வென்றது முதல் ஒரு கேப்டனாக அவரது அபார வளர்ச்சி துவங்கியது. அவருக்கு அணியில் அதிக அதிகாரம் இருந்தது.
கங்குலி, டிராவிட் நீக்கம்
டி20 உலகக்கோப்பை வென்றதற்கு பின் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனான தோனி, 2011 உலகக்கோப்பையை மனதில் வைத்து மூத்த வீரர்களான கங்குலி மற்றும் டிராவிட்டை அணியில் இருந்து நீக்கினார். அவர்கள் சரியாக பீல்டிங் செய்வதில்லை என காரணம் கூறப்பட்டது.
சரியான முடிவு
2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்ற போது தோனி அன்று எடுத்த முடிவு சரி தான், எந்த வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றுத் தான் ஆக வேண்டும் என பலரும் ஒப்புக் கொண்டனர். அதே போல, கங்குலி, டிராவிட் தங்கள் நீக்கத்தை சர்ச்சையாக மாற்ற அனுமதிக்கவில்லை என்பதும் முக்கியமான விஷயம்.
லக்ஷ்மன் சர்ச்சை
2011 உலகக்கோப்பைக்கு பின் தோனி எடுத்த சில முடிவுகள் சர்ச்சையை கிளப்பியது. அதில் முக்கியமானது விவிஎஸ் லக்ஷ்மன் குறித்தது. லக்ஷ்மன் டெஸ்ட் வீரர் என முத்திரை குத்தப்பட்டு, அதில் மட்டுமே ஆடி வந்தார். 2012 நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்த போதே, முதல் டெஸ்ட்டுக்கு சில நாட்கள் முன்பு தன் ஓய்வு முடிவை அறிவித்தார்.
தோனி தான் காரணம்
தன் ஓய்வு முடிவுக்கு தோனி தான் காரணம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு, "தோனியுடன் பேச முயன்றேன். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்றார். அப்போது அது பெரும் சர்ச்சை ஆனது.
சச்சின், சேவாக் நிலை
அதே 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில், 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க இருப்பதாகவும், சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூவருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இடம் கிடைக்காது. சுழற்சி முறையில் தான் இடம் கிடைக்கும் என தோனி கூறினார்.
தவறான முடிவு
ஆனால், அந்த முடிவு அப்போதே தவறு என நிரூபணமானது. இந்தியா அந்த தொடரில் தோல்வி அடைந்தது. அதன் பின் சேவாக் மற்றும் கம்பீர் அணியில் அவ்வப்போது புறக்கணிக்கப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் பார்ம் அவுட் என சேவாக், கம்பீர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சச்சின் மட்டும் விதிவிலக்கு
சச்சின் தோனியால் புறக்கணிக்கப்பட்டார் என்பதில் ஓரளவு உண்மை உள்ளது. 2011க்கு பின் சச்சினுக்கு தேர்வுக் குழு ரூபத்தில் கடும் அழுத்தம் தரப்பட்டது. எனினும், சச்சின் 2013 வரை தாக்குப் பிடித்து அவருக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் அவர் விருப்பப்படி ஓய்வு பெற்றார்.
தோனி செய்தது சரியா?
தோனி செய்தது சரி தான். அனைத்து வீரர்களும் வயதாகி விட்டால் மந்தமாக ஆடினார்கள். அதனால், இளம் வீரர்களுக்கு வழிவிட, அவர்களை நீக்கி தோனி சரியான முடிவைத் தான் எடுத்தார் என்பதை பலரும் ஏற்றுக் கொண்டனர். அதை அவர் செய்த விதம் சரியா, தவறா என்பது வேறு விஷயம்.
தோனியின் இன்றைய நிலை
ஆனால், இன்று தோனியின் நிலையும் கிட்டத்தட்ட அதே தான், தோனி ரன் குவிக்கிறார். ஆனால், முன்பு போல இல்லை. பேட்டிங்கில் மந்தமாக இருக்கிறார். விக்கெட் கீப்பிங்கில் ஐபிஎல் வரை கில்லியாக இருந்தார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் அதிலும் சில சறுக்கல்கள் இருந்தன. மற்ற ஜாம்பவான்களை ஒரு கட்டத்தில் எப்படி அணியில் இருந்து தோனி நீக்கினாரோ, அதே போல, தோனியை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டதோ? என்று தோன்றுகிறது.