சாம்பியன்ஷிப்
டெஸ்ட் கிரிக்கெட்டையும் பிரபலபடுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நெருங்கியுள்ளது. மொத்தம் 9 நாடுகள் பங்கேற்ற இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 5 தொடர்கள் விளையாடி 12 போட்டிகள் வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 520 எடுத்துள்ளது. அதே போல நியூசிலாந்து அணி 5 தொடர்களில் விளையாடி 7 போட்டிகள் வெற்றி மற்றும் 4 தோல்வியுடன் 420 புள்ளிகள் பெற்றுள்ளது.
புள்ளிகள் கணக்கீடு
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தரவரிசைப்பட்டியல் முதலில் புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதாவது, அணிகளின் ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்த தொடரில் எத்தனை போட்டிகள் நடக்கிறதோ அதற்கு ஏற்றவாறு இந்த 120 புள்ளிகள் பிரிக்கப்பட்டு வெற்றி புள்ளிகள் வழங்கப்படும். சமனில் முடிவடையும் போட்டிகளுக்கு புள்ளிகள் சமமாக பிரித்து தரப்படும். ஆனால் பின்னர் கொரோனா பாதிப்பால் பல்வேறு தொடர்கள் நடைபெறாததால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு புள்ளி சதவிகித முறை கொண்டு வரப்பட்டது.
சமனில் முடிந்தால் என்ன ஆகும்?
இந்நிலையில் தற்போது பெரியளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் எந்த முறை கணக்கிடப்படும் என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு ஐசிசி இதுவரை எந்த ஒரு கணக்கீட்டு முறையையும் அறிவிக்கவில்லை. போட்டி நெருங்கிவிட்டதால், இதற்கு மேலும் புதிய முறைகள் அறிவிக்கப்படாது எனத்தெரிகிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஒருவேளை சமனில் முடிவடைந்தால், இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.
ரிசர்வ் டே
இதே போல புதிய விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி, நாளொன்றுக்கு 6 மணி நேரம் வீதம், 5 நாட்களில் 30 மணி நேரம் நடைபெறவுள்ளது. ஒருவேளை மோசமான வானிலை, வெளிச்சமின்மை போன்ற பிரச்னைகளால் ஒரு நாளுக்கு உண்டான போட்டி தடைபட்டால் அதற்காக பின்னர் ஒருநாள் சேர்த்துக் கொடுக்கப்பட மாட்டாது. சில ஓவர்கள் தடைபட்டால், அவை மட்டும் அடுத்து வரும் நாளில் ( Reserve day) சேர்த்து வீசப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.