கொரோனா
சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. பின்னர் தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
போட்டிகள் ஒத்திவைப்பு
இந்தியாவுடனான தொடர் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வந்தது. மெயின் அணி வீரர்கள் குவாரண்டனை முடிக்க காலதாமதம் ஆனால் இலங்கை ஏ அணியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், போட்டிகள் 4 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.
முதற்கட்ட பரிசோதனை
இந்நிலையில் இந்த தொடர் முழுமையாக ரத்தாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இலங்கையின் 2 அணிகளிலுமே முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் தான் வந்துள்ளன. வீரர்கள் பபுளுக்குள் மிகவும் நெருங்கி பழகுவதால் 2ம் கட்ட பரிசோதனையின் போது மேலும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை யாருக்கேனும் நடந்துவிட்டால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறும் எனக்கூறப்படுகிறது.
Recommended Video
வெளியேறுமா இந்தியா?
இந்திய அணி கடந்த ஜூன் 28ம் தேதியே இலங்கை வந்தடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் முறை போட்டிகளை ஒத்திவைத்துள்ள போதே அவர்களின் மனநிலையில் ஏமாற்றம் என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனாவால் மேலும் சில நாட்கள் அவர்களை அங்கு காத்திருக்க சொல்ல முடியாது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், இந்திய ஏ அணியை வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அனுப்பவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே மீண்டும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால், இந்திய வீரர்களை திரும்ப அழைத்துவிட கங்குலி கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.