கோலி
இந்திய அணியின் முக்கியமான வீரர் மற்றும் கேப்டன் கோலி இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்து வெளியேறியதே இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. அதோடு முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னில் அவுட்டான அவமானம் இந்திய அணியை விடாமல் துரத்தியது. இந்த அவமானகரமான தோல்விக்கு பின்தான் இந்தியா மீண்டு வர தொடங்கியது.
வெற்றி
இரண்டாவது டெஸ்டில் கோலி, ரோஹித் இல்லாமல் ரஹானே கேப்டன்சியில் களமிறங்கி இந்திய அணி நிகழ்த்திய மாயம். 5 பவுலர்களை வைத்து ஆஸி. யை புரட்டி எடுத்து முதல் வெற்றியை ருசித்த விதம் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதிலும் அஸ்வின், ஜடேஜா எடுத்த விக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவை நிலை குலைய செய்தது.
சிறப்பு
ரஹானே அந்த போட்டியில் அடித்த செஞ்சுரி இந்திய அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பின் வரிசையாக உமேஷ் யாதவ், ஷமி காயம் காரணமாக வெளியேற இந்திய அணி நிலைகுலைந்து போனது. முக்கிய வீரர்கள் இல்லாமல் மூன்றாவது டெஸ்டில் இந்தியா களமிறங்கியது. இதற்கு இடையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்கள் கொரோனா விதிகளை மீறிவிட்டதாக கூறி தேவையில்லாத சர்ச்சையை ஆஸ்திரேலியா உருவாக்கியது.
மோசமான சூழ்நிலை
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மூன்றாவது டெஸ்டின் பாதியில் ஜடேஜா, விஹாரி, அஸ்வின் என்று கொத்து கொத்தாக இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடையில் சிராஜ் போன்ற வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதலுக்கு உட்படுத்தினார்கள். இந்தியர்களுக்கு மன ரீதியான தாக்குதலை, அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வந்தனர்.
ஸ்லெட்ஜிங்
இவ்வளவிற்கும் இடையில் இன்னொரு பக்கம் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்தனர். இந்திய வீரர்களை பவுலிங்கில் தாக்கியதோடு கடுமையான வார்த்தைகளால் தாக்கி மென்டல் பிரஷர் கொடுத்தனர். ஆனால் இதற்கும் இடையில் கூட மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. அஸ்வின் - விஹாரியின் சிறப்பான ஆட்டம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது.
கடைசி டெஸ்ட்
இப்படிப்பட்ட நிலையில்தான் பும்ரா, ஜடேஜா, அஸ்வின், விஹாரி, சமி, உமேஷ், பாதியில் காயம் அடைந்த சைனி என்று முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாமல் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இருக்கிற வீரர்களை வைத்தே இந்திய அணி கப்பாவில் களமிறங்கியது. வாஷிங்க்டன், சிராஜ், சுந்தர் நடராஜன், ஷரத்துல் தாக்கூர் என்று அனுபவமில்லாத வீரர்கள் உடன் கடைசி டெஸ்டில் இந்தியா களமிறங்கியது.
ஆனால்
இப்படி அனுபவம் இல்லாத வீரர்களுடன் களமிறங்கியும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. கடந்த 33 வருடமாக கப்பாவில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது இல்லை என்ற சாதனையை இந்தியா முறியடித்து வென்றுள்ளது. இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்கள் மட்டுமே இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் காரணம்
இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் பலர் கிராமத்தை சேர்ந்த வறுமையான பின்னணியை கொண்ட வீரர்கள். நடராஜன் சேலத்தை சேர்ந்தவர், சைனி வறுமையான ஹரியானா குடும்பத்தை சேர்த்தவர். சிராஜ் வறுமையான ஹைதராபாத் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஷரத்துல் தாக்கூர் கடுமையான வறுமையான சூழலில் வளர்ந்தவர்.
ரஹானே
இந்திய அணியின் கேப்டன் ரஹானேவே வறுமையான பின்னணியில் வந்தவர். இப்படி இந்திய அணியின் வெற்றிக்காக இன்று உழைத்த பலரும் வறுமைக்கு இடையில் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தவர்கள். இவர்கள் இழக்க எதுவும் இல்லை. அதைதான் களத்திலும் இவர்கள் வெளிப்படுத்தினார்கள். என்ன நடந்தாலும் போராடும் குணம் இவர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது.
எவ்வளவு மோசம்
எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் குணம் இவர்களிடம் இருக்கிறது. கோலி போனால் ரஹானே ஆடுவார். ரஹானே போனால் புஜாரா ஆடுவார். புஜாரா போனால் பாண்ட் ஆடுவார். பண்ட் போனால் விஹாரி - அஸ்வின்ஆடுவார்கள். அவர்களும் போனால் சுந்தர் , ஷரத்துல் ஆடுவார்கள்.. இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக போராடியதே.. இந்திய அணியின் இந்த மிகப்பெரிய கூட்டு வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக சிறந்த அணி இதுதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. வெல்டன் டீம் இந்தியா!