அம்பாலா விமானநிலையத்தில் ரஃபேல் விமானங்கள்
36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016ல் பிரான்சின் டசால்ட் விமான நிறுவனத்துடன் 59,000 கோடி ரூபாய்க்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்ட நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அம்பாலா விமானப்படை விமானநிலையத்தில் இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பூஜைகள்... சாகச நிகழ்ச்சிகள்
இந்நிலையில் 5 ரஃபேல் போர் விமானங்களும் முறைப்படி இன்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையொட்டி அம்பாலாவில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏவுகணைகளை தாங்கும் ரஃபேல்
ரஃபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும் வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் துல்லியமாக குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் ரஃபேல் விமானங்களுக்கு உள்ளது. இந்த ஏவுகணைகள் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் இலக்குகளை குறிவைக்கும் திறன் கொண்டவை.
சரியான நேரத்தில் இணைப்பு
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், தற்போது ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது. ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதன்மூலம் விமானப்படையின் வலிமை மேலும் உயர்ந்துள்ளது.
தோனி பாராட்டு
இந்நிலையில் ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்துவரும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைந்ததன்மூலம் அதன் வலிமை அதிகரிக்கும் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். உலகின் சிறப்பான ரஃபேல் போர் விமானங்கள் சிறப்பான இந்திய விமானப்படை பைலட்டுகளின் கைகளில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டிவிட்டர் மூலம் பாராட்டு
சமூகவலைதளங்களில் அதிகமாக செயல்படாத தோனி, முக்கியமான விஷயங்கள் குறித்து அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இதேபோல தற்போது இந்திய விமானப்படையில் ரஃபேல் விமானங்கள் சேர்ப்பு குறித்தும் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.