மிரட்டிய ஜேமிசன்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் முடிவு
இன்றைய நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக மழையால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, ஒருவேளை ஐந்து நாட்களில் முடிவு கிடைக்காவிடில் 'ரிசர்வ் டே (மாற்றுநாள்)' ஒதுக்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், ரிசர்வ் டே ஒதுக்கப்படுவது குறித்து இப்போதே முடிவு செய்யப்படாது. நாளைய கடைசி நாளின் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
மேட்ச் referee கிறிஸ் பிராட்
மேட்ச் referee கிறிஸ் பிராட் ஐந்து நாட்களின் போது இழந்த நேரத்தை ஈடுகட்ட ரிசர்வ் டே தான் ஒரே வழி என்று நினைத்தாலோ அல்லது போட்டியில் எந்தவித தீர்க்கமான முடிவும் ஏற்படாத சூழல் நிலவுகிறது என்று அவர் நினைத்தால் மட்டுமே ரிசர்வ் நாளைத் தேர்வு செய்ய முடியும். இவையெல்லாம், இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தையும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மேட்ச் referee கிறிஸ் பிராட் கைகளில் தான் உள்ளது.
யாருக்கு கோப்பை?
இந்நிலையில், ஒருவேளை ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டு, அதில் விளையாடியும் முடிவு கிடைக்கவில்லை எனில், என்ன நடக்கும் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அப்படி மாற்று நாளில் விளையாடி மேட்ச் டிரா ஆனாலோ அல்லது டை ஆனாலோ இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். ஐசிசி அறிவித்துள்ள விதிகளின்படி இரு அணிகளும் சாம்பியன்ஸ்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், ரசிகர்கள் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்காகவா, இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளின் முடிவையும் நாங்கள் ஃபாலோ செய்து வந்தோம்? என்பதே அவர்களது கேள்வியாக உள்ளது.