டிரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடைசி நாளில் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி எடுத்த 'அதிரடி ஆட்டம்' எனும் வியூகம் தான் பெரும் பின்னடைவாக அமைந்தது. கோலி, ரஹானே, ஜடேஜா என்று அனைவரும் வரிசையாக பெவிலியன் திரும்ப, கடைசி வரை ரிஷப் பண்ட்டால் அடிக்கவே முடியவில்லை. அந்த செஷனில் மட்டும் இந்தியா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் இப்போட்டியை டிரா செய்திருக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொறுமையாக விளையாடினாலும் விக்கெட் விழ வாய்ப்பிருக்கிறதே என்ற கேள்வியையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அட்லீஸ்ட் இன்னும் 30 - 50 ரன்கள் அதிகமாக அடித்திருக்கலாம். அது இந்தியாவுக்கு இந்த மிகப்பெரும் இறுதிப் போட்டியை டிரா செய்ய சாதகமாகவும் அமைந்திருக்கலாம்.
ஸ்பின் தான் பலம்
சரி.. இந்த இடத்தில் மகேந்திர சிங் தோனி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஒரு சிறிய கற்பனை. அணித் தேர்வில், நிச்சயம் விராட் கோலியோடு தோனியும் ஒத்துப் போயிருப்பார். 5+1+5 எனும் ஃபார்முலாவைத் தான் தோனியும் தேர்வு செய்திருப்பார். அதவாது, 5 பேட்ஸ்மேன், 1 விக்கெட் கீப்பர், 5 பவுலர்கள் என்று அணியை வடிவமைத்திருப்பார். இந்த ஐந்து பவுலர்களில் நிச்சயம் அஷ்வின் - ஜடேஜா காம்போ இணைந்திருக்கும். உலகின் எப்பேற்பட்ட பிட்ச்சாக இருந்தாலும், ஸ்பின் கொண்டு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே என்று இன்று வரை வலிமையாக நம்புபவர் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இத்தனை ஆண்டு கால வெற்றிகரமான பயணத்திற்கான அவரது சூத்திரம் ஸ்பின் அட்டாக் தான். மற்ற அணிகள் எல்லாம் உலகின் டாப் ஸ்பீட்ஸ்டர்ஸ் தேர்வு செய்வதில் கோடிகளை கொட்டினால், இவர் தரமான ஸ்பின் கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருப்பார்.
இனி கஷ்டம்
ஆகையால், ஜடேஜா, அஷ்வினுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுத்திருப்பார். முதல் ஐந்து நாள் ஆட்டத்தில் தோனியின் அணுகுமுறைக்கு, கோலியின் அணுகுமுறைக்கு எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. ஆனால், காட்சிகள் கிளைமேக்சில் தான் மாறியிருக்கும். ஆம், ஐந்தாவது நாளின் கடைசி செஷனில் இந்திய ஒப்பனர்களான ரோஹித் மற்றும் ஷுப்மன் கில் விக்கெட்டுகள் விழுந்த உடனேயே, இந்த பிட்சில் ரன் அடிப்பதும் கடினம், பெரிய டார்கெட் நிர்ணயிப்பதும் கடினம் என்று முடிவு செய்திருப்பார். இதனால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கட்டை போடச் சொல்லி வீரர்களுக்கு மெசேஜஸ் பிறந்திருக்கும்.
நைட் வாட்ச்மேன்
குறிப்பாக, நேற்று கடைசி நாளில் அடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பமான மனநிலையில் புஜாரா அவுட்டான சம்பவம், தோனி கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தால் 300 பந்துகளுக்கு டொக்கு வைத்துவிடு என்றே தோனி சொல்லியிருப்பார். அதேபோல், 3வது விக்கெட்டுக்கு நைட் வாட்ச்மேனாக அஷ்வின் அல்லது இஷாந்தை இறக்கியிருக்க கூட வாய்ப்புள்ளது. அவரது ஒட்டுமொத்த நோக்கமும், 'இனி மேட்ச் ஜெயிப்பது கடினம், ஸோ, அட்லீஸ்ட் கோப்பை கையை விட்டு போய் விடக் கூடாது என்பதில் தான் இருந்திருக்கும். அப்படி தோனி நினைப்பதனாலேயே இந்தியா டிரா செய்திருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால், டிரா செய்ய அதிக வாய்ப்பு இருந்திருக்கும். எது எப்படியோ.. கோலி கோலி தான்.. தோனி தோனி தான். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.