நியூசிலாந்து லீடிங்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
தடுமாறும் இந்தியா
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
பண்ட்
இந்நிலையில், மதிய உணவுக்கு பிறகு ஜடேஜா, பண்ட், அஷ்வின் அடுத்தடுத்து அவுட்டாகினர். இடது கை பேட்ஸ்மேன்களான ஜடேஜா மற்றும் பண்ட்டுக்கு 'round the wicket'ல் வீசிக் கொண்டிருந்தார் வாக்னர். எல்லா பந்துகளும் பவுன்ஸ், ஷார்ட் பிட்ச் என்று எகிறின. தூக்கி அடித்தால் கேட்ச், அவாய்ட் பண்ண நினைத்தால், எட்ஜ் ஆக வாய்ப்பு என்று கடுமையாக நெருக்கடி கொடுத்தார் வாக்னர். ஜடேஜாவும், மிக சாமர்த்தியமாக 49 பந்துகள் வரை சந்தித்து, வாக்னரை டீல் செய்து வந்தார். ஆனால், கடைசியில் 16 ரன்களில், அற்புதமான லைன்ட் அண்ட் லெந்த் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார் ஜடேஜா. அதேபோல், போல்ட் ஓவரில் பண்ட் தூக்கி அடிக்க, பந்து தலைக்கு மேலே செல்ல நிகோலஸ் பிசிறில்லாமல் கேட்ச் பிடித்தார். தொடர்ந்து, அஷ்வினும் போல்ட் ஓவரில் கேட்ச் ஆனார். இறுதியில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
யாருக்கு கோப்பை?
இந்நிலையில், ஒருவேளை ஆட்டம் ஒருவேளை டிராவானால் யாருக்கு கோப்பை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அதாவது, ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டு, அதில் விளையாடியும் முடிவு கிடைக்கவில்லை எனில், என்ன நடக்கும் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அப்படி மாற்று நாளில் விளையாடி மேட்ச் டிரா ஆனாலோ அல்லது டை ஆனாலோ இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். ஐசிசி அறிவித்துள்ள விதிகளின்படி இரு அணிகளும் சாம்பியன்ஸ்களாக அறிவிக்கப்படுவார்கள்.