ஆசியா கோப்பை இறுதிப் போட்டி
1995 ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் முதல் அனைத்துமே அஸாருதீனுக்கு சாதகமாக இருந்தது. அவர் டாஸ் வென்றார். அதேபோல பேட்டிங்கிலும் அருமையாக ஆடினார். பீல்டிங்கிலும் வழக்கம் போல அசத்தினார். ஷார்ஜா மைதானத்தில்தான் இந்தப் போட்டி நடந்தது. இலங்கையின் கேப்டனாக அர்ஜூன ரனதுங்கா இருந்தார். டாஸ் வென்ற அஸாருதீன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இலங்கை முதலில் பேட் செய்தது.
இந்தியா முதலில் பீல்டிங்
இலங்கையின் தொடக்கம் நன்றாகத்தான் இருந்தது. சனத் ஜெயசூர்யாவும், ரோஷன் மகானமாவும் அபாரமாகவே ஆடினர். ஜெயசூர்யா போர் அடித்தால், மகானமா சிங்கிளாக ரன்களைச் சேர்த்தார். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதைப் பார்த்த அஸாருதீன் தனது உத்தியை அதிரடியாக மாற்றினார். கும்ப்ளேவை கொண்டு வந்தார். போட்ட முதல் ஓவரிலேயே மகானமாவை தூக்கினார் கும்ப்ளே.
அஸாருதீன் பீல்டிங் வியூகம்
அடுத்த ஓவர் வெங்கடேச பிரசாத். அந்த ஓவரில் ஜெயசூர்யா காலியானார். தொடர்ந்து இலங்கை சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. அசங்க குருசிங்கா, அரவிந்த டிசில்வா ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட ஆரம்பித்தபோது அதையும் அஸாருதீன் புத்திசாலித்தனமாக, மனோஜ் பிரபாகரை வைத்து உடைத்தார். பிரபாகர் பந்தை தூக்கி அடிக்க முயன்ற டிசில்வா, நயன் மோங்கியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் ரனதுங்கா அதிரடிக்கு முயற்சித்தார். ஆனால் ரன் அவுட் செய்யப்பட்டார். அஸாருதீனே அபாரமாக அவரை ரன் அவுட் செய்தார்.
அருமையான தொடக்கம்
பின்னர் வந்த ஹசன் திலகரத்னே ரொம்ப நிதானமாக விளையாடி 22 ரன்களைச் சேர்த்தார். குருசங்கா மறுபுறம் பொறுப்பாக ஆடி அரை சதம் அடித்தார். கடைசி ஓவர்களில் ரொமேஷ் கலுவிதரனா 18 ரன்களை 17 பந்துகளில் எடுத்தார். இறுதியில், இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்தது. 231 ரன்களை நோக்கி தனது சேஸிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு அருமையான தொடக்கத்தைக் கொடுத்தார் சச்சின் டெண்டுல்கர். இவர் முதல் போட்டியில்தான் சதம் போட்டிருந்தார்.
மனோஜ் பிரபாகர் திணறல்
அவரும் மனோஜ் பிரபாகரும்தான் தொடக்க ஆட்டக்காரர்கள். சச்சின் அடித்து நொறுக்க, மனோஜ் பிரபாகர் மறுபுறம் திணறிக் கொண்டிருந்தார். இதனால் அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். மறுபக்கம் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக போய்க் கொண்டிருந்த நிலையில் அவரை சம்பா ராமநாயகே அவுட்டாக்கினார். 58 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தது இந்தியா.
சித்து, அஸார் அபார பேட்டிங்
அடுத்து ஜோடி சேர்ந்தனர் சித்துவும், அஸாரும். இருவருமே டெண்டுல்கரின் அதிரடியை அப்படியே தொடர்ந்தனர். இலங்கை பந்துவீச்சில் எப்போதெல்லாம் ஓட்டை இருந்ததோ அதை சரியாக பயன்படுத்தி அடித்தனர். குறிப்பாக இலங்கை ஸ்பின்னர்களை கடுமையாக பதம் பார்த்தனர். அஸாருதீன் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட்டார். சித்து மறுபக்கம், 1, 2 என குருவி சேர்ப்பது போல சேர்த்தார்.
அருமையான ஆட்டம்
ஒரு கட்டத்தில் அஸாருதீன் நிலைத்து நின்று விட்டார். வந்த பந்துகளெல்லாம் ரன்களாக மாறின. கடைசியாக தேவைப்பட்ட ரன்களை பவுண்டரியாக மாற்றி எடுத்து அசத்தினார் அஸாருதீன். அந்தப் பந்து பந்து வீச்சாளர் ராமநாயகேவின் தலைக்கு மேல் பறந்து ரசிகர்களை அதிர வைத்தது. கடைசி வ ரை ஆட்டமிழக்காமல் 89 பந்துகளில் 90 ரன்களைக் குவித்து கோப்பையை தட்டிச் சென்றார் அஸாருதீன். மறுமுனையில் சித்து 84 ரன்களைக் குவித்தார். அஸாரும், சித்துவும் இணைந்து 175 ரன்களைக் குவித்தனர்.
தோனி வந்து தீர்த்து வைத்த வறட்சி
49 பந்துகளை மீதம் வைத்து இந்தியா இறுதிப் போட்டியில் வென்றது. இது இந்தியாவுக்கு தொடர்ச்சியான 4வது ஆசியக் கோப்பையாகும். இந்தப் போட்டியை ஸ்டைலாக வென்ற அஸாருதீனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட நீண்ட இரும்பு வாள் பரிசாக அளிக்கப்பட்டது அவரது ரசிகர்களால். இந்த வெற்றிக்குப் பிறகு 15 வருடம் இந்தியா ஆசியா கோப்பையை வெல்லவே முடியாமல் தவித்தது. 2010ல் தோனி வந்துதான் கோப்பையை வென்று வறட்சியைத் தீர்த்து வைத்தார்.