அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான்
மார்ச் 30ம் தேதி மொஹாலியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிப் போட்டியில் சந்தித்தன. உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதிய 5வது போட்டி அது. அந்தப் போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். காரணம், இந்தியா இதுவரை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் தன்னை வீழ்த்த விட்டதே இல்லை என்பதால். அது இங்கும் மெய்ப்பிக்கப்பட்டது. ஆம், இந்தியாதான் வென்றது.
எளிதில் கிடைக்காத வெற்றி
அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி அத்தனை சீக்கிரமாக கிடைத்துவிடவில்லை. காரணம், பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அட்டகாசமாக பந்து வீசினார். அவர் வீசிய வேகத்தைப் பார்த்தபோது இந்தியா தோற்று விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது. அப்படி ஒரு அற்புதமான பந்து வீச்சு அது. ஆனால் "கடவுள்" வந்து நம்மைக் காப்பாற்றினார்.. ஆம்.. கிரிக்கெட் கடவுள் சச்சின்தான் காப்பாற்றினார்.
அருமையான தொடக்க ஆட்டக்காரர்கள்
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. வீரேந்திர ஷேவாக்கும், சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் அட்டகாசமாகவே இருந்தது. ஆனால் ஷேவாக் 25 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் வஹாப் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறியதும் சோதனை தொடங்கியது. இருப்பினும் மறு முனையில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 85 ரன்களைச் சேர்த்து இந்தியாவைக் காப்பாற்றினார்.
டெண்டுல்கருக்கு 4 கண்டம்
ஆனால் இந்தப் போட்டியில் நான்கு முறை அவுட்டாகும் அபாயத்திலிருந்து சச்சின் தப்பினார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அபாரமான ஸ்கோரை எட்டினார் சச்சின். மற்ற யாரும் சரியாக ஆடாத நிலையில் இந்தியா 260 என்ற ஸ்கோரை எட்டியது. அதன் பிறகு பந்து வீச்சில் இந்தியா கலக்கியது. ஐந்து பந்து வீச்சாளர்கள் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இறுதியில் ஷாகித் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கை கொடுத்த சச்சின்
இப்படி இந்தியாவை கோப்பை பெறும் கனவை நனவாக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற சச்சின் டெண்டுல்கர் உதவிய நாள் இது. இன்னொரு விசேஷமும் இதில் உண்டு. அதாவது பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் சச்சின் ஆடியிருந்தார் என்பதுதான் அந்த அதிசயம். உண்மையில் சச்சின் செய்த சாதனைகள் மகத்தானவை மட்டுமல்ல.. அத்தனை சீக்கிரம் யாராலும் முறியடிக்கவும் முடியாதவை.