ஷார்ஜா சதங்கள்
22 வருடத்திற்கு முன்பு நான் ஷார்ஜாவில் அடித்த இரு சதங்கள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அது மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நான் போட்ட சதங்கள் ஆகும். ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 143 ரன்கள். இன்னொன்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது நான் எடுத்த 134 ரன்கள் ஆகும். அன்று எனது பிறந்த நாளும் கூட. எனவே இது மிகவும் விசேஷமான சதமாகவும் அமைந்தது என்று கூறியுள்ளார் சச்சின்.
நல்ல ஸ்கோர்
முதல் சதம் போட்ட போட்டி நாங்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது நடந்தது. எனவே அந்த சதமும் விசேஷமானதுதான். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்த சதங்கள். எனவே இரண்டுமே நல்ல ஸ்கோர். ஆனால் இதை விட சுவாரஸ்யம் இந்தப் போட்டியில் இருந்தது. அதை நான் சொல்லியாக வேண்டும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.
திடீரென வந்த புழுதிப் புயல்
நான் பேட் செய்து கொண்டிருந்தபோது திடீரென புழுதிப் புயல் வந்து விட்டது. அப்படி ஒரு சூழ்நிலையில் நான் அதுவரை விளையாடியதில்லை. இதனால் எனக்குள் பயம் வந்து விட்டது. எங்கே புயல் நம்மை வந்து தூக்கிக் கொண்டு போய் விடுமோ, நம்மை உறிஞ்சிக் கொண்டு விடுமோ என எனக்குள் பயம். நான் ஒல்லியாக வேறு இருப்பேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்று சச்சின் குறிப்பிட்டார்.
கில்கிறிஸ்ட் தப்பினார்
ஒரு வேளை புயல் நம்மைத் தாக்கினால் அருகில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த கில்கிறிஸ்ட்டை இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்வோம். அப்படி செய்தால் புயலால் நம்மை கீழே தள்ள முடியாது, கீழேயும் விழ மாட்டோம். ஏனென்றால் 2 பேரின் வெயிட்டை புயலால் தூக்க முடியாது என்று நானாக நினைத்துக் கொண்டு கில்கிறிஸ்ட் பக்கமாக போய் நின்று கொண்டேன். ஆனால் நல்லவேளையாக அம்பயர் போட்டியை நிறுத்தி விட்டு பெவிலியன் திரும்ப உத்தரவிட்ட விட்டார். தப்பினோம் என்று அந்த சம்பவத்தை சச்சின் நினைவு கூர்ந்துள்ளார்.
கடினமான இலக்கு
அதன் பிறகு மீண்டும் இலக்கு குறைக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது. ஆனாலும் பெரிய அளவில் இலக்கு குறையவில்லை. 3 ஓவர்களைக் குறைத்து இலக்கு ரன்களிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே குறைக்கப்பட்டது. இதனால் மிகுந்த நெருக்கடியுடன் நாங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தோம். அப்போதெல்லாம் இப்போது மாதிரி இல்லையே. ஒரே பந்துதான். புதுப் பந்து கிடையாது. ஸோ பந்து எப்படி இருக்கோ அதை வைத்துத்தான் ஆட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிறப்பான சதங்கள்
இருப்பினும் சிரமத்துக்கு மத்தியிலும் சிறப்பாகவே விளையாடினோம். வெற்றியும் பெற்றோம். அப்போது மாதிரி இப்போது இல்லை. நிறைய மாறி விட்டது. நிறைய வசதிகள் வந்து விட்டன. நிறைய விதிகள். இலகுவாகி விட்டது விளையாட்டு. ஆனால் ஷார்ஜாவில் நான் விளையாடிய விளையாட்டு மிகுந்த சவாலுக்குரியது. அந்த வகையில் அந்த இரு சதங்களும் எனக்கு மிகவும் விசேஷமானது என்று கூறினார்.