16 வயதில்
சச்சின் டெண்டுல்கர் பள்ளிக் கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மாநில அணிக்குள் நுழைந்து, பின் இந்திய அணிக்குள் நுழைந்தார். அவர் வெறும் 16 வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்றார். அது அசாதாரணமானது. அதுவும் முதல் தொடரில் பாகிஸ்தான் அணியை சந்தித்தார்.
வக்கார் யூனிஸ் அறிமுகம்
1989இல் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் உச்சகட்டத்தில் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு வந்தது பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சு. அப்போது வக்கார் யூனிஸ் என்ற இளம் வேகப் பந்துவீச்சாளரையும் இந்திய அணி அறிமுகம் செய்தது.
ட்ரிப்பிள் செஞ்சுரி
மறுபுறம் இந்தியா 16 வயது சச்சினை அறிமுகம் செய்தது. சச்சின் பள்ளிக்கூட கிரிக்கெட்டில் ட்ரிப்பிள் செஞ்சுரி அடித்து இருந்தார். அண்டர் 19 அணியில் வக்கார் யூனிஸ் ஆடும் போதே சச்சினைப் பற்றி இந்திய அண்டர் 19 வீரர்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார்.
வெறும் பள்ளிக்கூட சிறுவன்
"மொத்த அண்டர் 19 அணியும் சச்சினைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். அவர் எத்தனை சிறப்பாக ஆடுகிறார் என பாராட்டுவார்கள். அவர் வெறும் பள்ளிக்கூட சிறுவன் தான். பள்ளிக் கூடத்தில் யார் ட்ரிப்பிள் செஞ்சுரி அடிப்பார்கள்? பள்ளிக்கூட கிரிக்கெட்டில் சதம் அடிப்பதே சிறப்பான விஷயம் தான்" என்றார் வக்கார் யூனிஸ்.
ஆச்சரியமானவை
"இந்த சிறுவன் எப்படியும் கிரிக்கெட்டில் மேலே வந்து சிறப்பாக செயல்படுவார் என தெரியும். முதல் சந்திப்பில் அவர் இப்போதுள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்ற எண்ணத்தை தரவில்லை. இத்தனை ஆண்டுகளில் அவர் களத்திலும், களத்துக்கு வெளியேயும் செய்துள்ள விஷயங்கள் ஆச்சரியமானவை" என்றார் அவர்.
முதல் அவுட்
மேலும், அப்போது சச்சின் கிரிக்கெட்டில் இத்தனை பெரிய பெயராக மாறுவார் என கருதவில்லை எனவும் கூறினார். சச்சினின் அறிமுக டெஸ்டில் அவரை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் வக்கார் யூனிஸ். சச்சின் முதன் முதலில் ஆட்டமிழந்தது வக்கார் யூனிஸ்-இடம் தான்.
மூக்கை உடைத்த வக்கார் யூனிஸ்
அது மட்டுமில்லை. அந்த தொடரின் கடைசிப் போட்டியில் சச்சினின் மூக்கை தன் பவுன்சரால் உடைத்தார் வக்கார் யூனிஸ். அப்போது நவ்ஜோத் சிங் சித்துவுடன் சச்சின் ஆடி வந்தார். அந்தப்ப் போட்டியில் வென்றால் தான் முடிவு தெரியும் என்பதால் பாகிஸ்தான் அணி தீவிரமாக ஆடி வந்தது.
ரத்தம் வடிந்தது
"எங்களுக்கு முடிவு தேவைப்பட்டது. அந்த தொடருக்கு முடிவு தெரிய வேண்டும் என நாங்கள் உண்மையான பச்சை நிற பிட்ச்சை தயார் செய்து இருந்தோம். சச்சின் ஆட வந்தார். இன்னிங்க்ஸின் துவக்கத்திலேயே அவரது மூக்கில் அடிபட்டு ரத்தம் வடிந்தது." என்றார்.
மீண்டும் ஆடிய சச்சின்
"எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சித்து அவருடன் ஆடி வந்தார். இருவரும் ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். அதன் பின் ஆடத் தயார் ஆனார். அதன் பின் அவர் அரைசதம் அடித்தார். அது அவர் எப்படிப்பட்ட வீரர் என காட்டியது. அப்போதே அவர் சிறப்பான வீரராக வருவர் என எங்களுக்கு தெரிந்தது." என்று கூறினார் வக்கார் யூனிஸ்.
இரண்டு அரைசதம்
சச்சின் அந்த தொடரில் 15, 59, 8, 41, 35 மற்றும் 57 ரன்கள் அடித்தார். 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் சச்சின் இரண்டு அரைசதம் எடுத்ததே அப்போது சிறப்பான செயல்பாடாக இருந்தது. அதன் பின் சச்சின் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.