சிறப்பான சிராஜ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரில் மட்டுமின்றி முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு பரிசளித்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். தற்போது இரு அணிகளும் விளையாடி வரும் 4வது போட்டியின் முதல் இன்னிங்சிலும் ஜோ ரூட் உள்ளிட்ட 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறப்பான வேகப்பந்து வீச்சு
இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு பதிலாக களமிறங்கிய சிராஜ், ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பிட்சில் தன்னுடைய வேகப்பந்து வீச்சு ஒன்றும் சளைத்ததில்லை என்று நிரூபித்துள்ளார். நேற்றைய தினம் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து ஆதரவு
இந்நிலையில் நேற்றைய தினம் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிராஜ், தான் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை அடுத்து இந்தியா ஏ அணிக்காக ராகுல் டிராவிட் தன்னை தேர்ந்தெடுத்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்தியா ஏ அணிக்காக விளையாடும் போதெல்லாம் தொடர்ந்து தனக்கு ஆதரவு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிட்னசில் கவனம் செலுத்த அறிவுரை
தன்னுடைய லைன் மற்றும் லெங்க்த் சிறப்பாக உள்ளதாக ராகுல் டிராவிட் எப்போதும் சுட்டிக் காட்டுவார் என்றும் தான் தன்னுடைய பிட்னஸ் மற்றும் லெங்க்த்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்துவார் என்றும் சிராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.