மல்லுக்கட்டும் 4 நிறுவனங்கள்
இந்தியன் பிரீமியர் லீக்கின் இந்த புதிய Blue Print-ல் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது, வீரர்களை தக்கவைத்தல், ஒரு மெகா ஏலம், ஒவ்வொரு அணிகளின் செலவுத் தொகையை அதிகரித்தல், மற்றும் ஊடக ஒளிபரப்பு உரிமை டெண்டர் ஆகியவை ஆகஸ்ட் 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் நிறைவேற்றப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஆர்.பி.-சஞ்சீவ் கோயங்கா குழு, அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழு, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட அரவிந்தோ பார்மா லிமிடெட், மற்றும் குஜராத்திலிருந்து செயல்படும் டோரண்ட் குழுமம் ஆகியவை புதிய 2 ஐபிஎல் அணிக்கான உரிமத்தை வாங்க ஆவலுடன் உள்ளார்கள்.
பிசிசிஐ முடிவு
அதேபோல், ஒவ்வொரு அணிகளும் செலவு செய்யும் அதிகபட்ச தொகையான ரூ .85 கோடியை, ரூ .90 கோடியாக அதிகரிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆக, ஒட்டுமொத்தமாக 10 அணிகளுக்கும் சேர்த்து 50 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும். இதில், 75% தொகையை கட்டாயமாக செலவிட வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த தொகை ரூ .90 கோடியிலிருந்து ரூ .95 கோடியாகவும், இறுதியில் 2024 சீசனுக்கு ரூ .100 கோடியாகவும் உயர்த்தப்படுமாம்.
12.5 கோடி செலவு
மேலும், இனி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதில், 3 இந்திய வீரர், 1 வெளிநாட்டு வீரர் என்று இருக்கலாம், அல்லது 2 இந்திய வீரர்கள் 2 வெளிநாட்டு வீரர்கள் என்றும் இருக்கலாம். வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் உரிமையாளர்கள் ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன், குறிப்பிட்ட தொகையை அவர்களின் பணப்பையில் இருந்து செலவழிக்க வேண்டும். மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ரூ .15 கோடி, ரூ .11 கோடி மற்றும் ரூ .7 கோடி என்ற அடிப்படையில் செலவு செய்யலாம். இரண்டு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால் ரூ .12.5 கோடி மற்றும் ரூ .8.5 கோடி செலவு செய்யலாம். ஒரு வீரரை மட்டும் தக்க வைக்க விரும்பினால் ரூ.12.5 கோடி செலவு செய்ய வேண்டும்.
தோனி நிலைமை?
நான்கு வீரர்கள் வரை தக்க வைக்க, பிசிசிஐ அனுமதி கொடுத்திருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கவுள்ள வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதில் ஆச்சர்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை விட, ரவீந்திர ஜடேஜாவை தக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதாவது, முதல் வீரராக ஜடேஜாவையும், பிறகு தோனி, சாம் கர்ரன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
டு பிளசிஸ் சிக்கல்
இதனால், சென்னை அணிக்காக பல வருடங்களாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவின் இடத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், டு பிளசிஸ் இடத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், விதிமுறைப்படி நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட வேண்டும் என்பதால், இவர்கள் நால்வருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்றும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.