ப்ரித்வி கணுக்கால் காயம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ப்ரித்வி ஷா, முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல். இதில் ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே!! முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை!!
ராகுல் மற்றும் முரளி விஜய்
ப்ரித்வி ஷா இல்லாத எந்த இரண்டு வீரர்கள் இந்திய அணிக்கு துவக்கம் அளிக்கலாம்? அடுத்து இருக்கும் ராகுல் மற்றும் முரளி விஜய் இருவரும் தான் துவக்கம் அளிப்பார்கள் என எளிதாக நம்மால் முடிவுக்கு வரமுடியவில்லை. காரணம் ராகுல் தற்போது மிக மோசமான பார்மில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி தவிர மற்றவற்றிலும் ராகுல் சுத்தமாக ரன் குவிக்கவில்லை.
முரளி விஜய் உறுதியா?
முரளி விஜய் அணிக்கு துவக்கம் அளிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. இங்கிலாந்தில் முரளி விஜய் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என அணியில் இருந்து நீக்கப்பட்டார். அணியில் மீண்டும் இடம் பெற இங்கிலாந்து கவுன்டி அணியில் ஆடி சதம், அரைசதங்கள் அடித்து தன் பார்மை நிரூபித்தார் விஜய். கடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்து "ஏ" அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஒரு அரைசதம் அடித்து இருந்தார்.
ராகுல் கதை என்ன?
ஆனால், ராகுல் கதை அப்படி அல்ல. பல வாய்ப்புகள் பெற்றும் அவர் தன்னை நிரூபிக்கவில்லை. ஒரு வேளை முதல் டெஸ்ட் போட்டியில் ராகுலை துவக்க வீரராக களம் இறக்கினால், இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்திக்கும்.
ரோஹித் சர்மா நல்ல தேர்வு
அவருக்கு மாற்று என பார்த்தால், ரோஹித் சர்மா தான் முதலில் நிற்கிறார். ரோஹித் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது சிறந்த பார்மில் இருக்கிறார் ரோஹித். அவரை டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பல காலமாக கூறி வருகின்றனர்.
மிடில்-ஆர்டரில் ரோஹித் சர்மா
ரோஹித் மிடில்-ஆர்டரில் ஆடுவார் என்ற திட்டத்தில் தான் அணியில் எடுக்கப்பட்டார். ஆறாவது இடத்தில் ரோஹித் களம் இறங்குவார் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு துவக்க வீரர் வாய்ப்பு அளித்தால் நிச்சயம் அவர் அதை ஏற்பார். மேலும், ரோஹித் போன்ற ஒரு ரன் குவிக்கும் வீரர் டெஸ்ட் போட்டியில் ஆறாவது இடத்தில் இறங்குவது சரியாக இருக்காது.
மற்ற மூன்று வீரர்கள்
ஒருவேளை ராகுல், ரோஹித்துக்கு அணியில் இடம் இல்லை என்றால் அடுத்து மூன்று வீரர்களுக்கு மிக சிறிய வாய்ப்புள்ளது. ஒருவர் பார்த்திவ் பட்டேல் மற்றவர் மாயங்க் அகர்வால். கடைசியாக தவான். இவர்களுக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.
பார்த்திவ் பட்டேல்
காரணம், பார்த்திவ் பட்டேல் அணியில் விக்கெட் கீப்பராக மட்டுமே இடம் பெற முடியும். அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் இருப்பதால் பார்த்திவ் வாய்ப்பு பெறுவது கடினமே. பார்த்திவை வெறும் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்க வாய்ப்பில்லை.
மாயங்க் அகர்வால்
மாயங்க் அகர்வால் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். மிக நீண்ட போராட்டத்துக்கு பின்னும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார் இவர். தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இவரது பெயர் இடம் பெறவில்லை. எனினும், ப்ரித்வி ஷாவின் காயம் குணமாக அதிக காலம் பிடிக்கும் என தெரிந்தால் மாற்று வீரராக இவர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.
ஷிகர் தவான்
ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் அதிரடியாக ஆடினார். நன்றாக ரன் குவித்தார். இங்கிலாந்தில் அவரால் ரன் குவிக்க முடியாமல் போனதையடுத்து டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. தற்போது டி20 தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் நன்றாக ரன் குவித்தும் தவானுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினம். பார்மை நிரூபித்தாலும் கிரிக்கெட் அரசியலில் பின்தங்கி உள்ளார் தவான்.