ஓப்பனிங்கில் அதிர்ச்சி
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஃபாப் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்த விராட் கோலியும் 25 ரன்களுக்கு ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஷாக் கொடுத்த பட்டிதார்
முக்கிய விக்கெட்கள் விழுந்ததால், ஆர்சிபி அணி இனி தினேஷ் கார்த்திக்கை நம்பி தான் உள்ளது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அனைவரும் ஷாக் கொடுத்தார் ராஜத் பட்டிதார். மறுமுணையில் தூண் போன்று நின்ற பட்டிதார் லக்னோ அணி பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். முக்கிய விக்கெட்களை எடுத்த போதும், அவரை லக்னோ பவுலர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் 49 பந்துகளில் ராஜத் பட்டிதார் சதம் விளாசினார்.
அதிவேகமான சதம்
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராஜத் பட்டிதார் 54 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களை அடித்தார். இதனால் 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது.
யார் இந்த ராஜத் பட்டிதார்
இவ்வளவு பெரிய உதவி செய்த ராஜத் பட்டிதர், ஆர்சிபி அணியால் ஒதுக்கப்பட்டவர் ஆவார். கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக அறிமுகமான இவர், 4 போட்டிகளில் 71 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் இந்தாண்டு அவரை மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்கவே இல்லை. எனினும் விதி மீண்டும் ஆர்சிபி அணிக்கே அவரை கொண்டு சேர்த்தது.
எப்படி சேர்க்கப்பட்டார்
ஆர்சிபி அணி வாங்கியிருந்த லுவ்னித் சிசோடியா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். எனவே அவருக்கு மாற்றாக ராஜத் பட்டிதார் ரூ.20 லட்சத்திற்கு கொண்டு வரப்பட்டார். தன்னை வேண்டாம் என துரத்தி அடித்த ஆர்சிபி அணியை இன்று இக்கட்டான சூழலில் காப்பாற்றி ராஜத் பட்டிதார் கெத்து காட்டியுள்ளார்.