என்ன காரணம்?
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அதேசமயம், இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை.
வெரைட்டி விருந்து
குறிப்பாக, காயத்தில் இருந்து மீண்டு வந்து ஃபுல் ஃபார்மில் இருக்கும் புவனேஷ் குமார் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது. ஏனெனில், டெஸ்ட் தொடர் நடைபெறும் இடம் இங்கிலாந்து. அங்கு, புவனேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த சீனியர் ஒருவரை டீம் மிஸ் செய்கிறது என்றால், அது பேரிழப்பாக முடியும். பிரிட்டன் கண்டிஷனில் Swing, Pace என்று வெரைட்டி கலந்து விருந்து வைப்பதில், புவனேஷை விட இந்திய அணியில் ஒருவர் சிறப்பானவராக இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பவுலர், அதுவும் முழு உடற் தகுதியுடன் இருக்கும் போது, ஏன் டிராப் செய்யப்பட்டார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
டெஸ்ட்டில் ஆர்வம் இல்லை
இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அதிர்ச்சிகர செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதில், "புவனேஷ்வர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை. அவர் தனது பயிற்சிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார். சிகப்பு பந்துகளை கொண்டு அதிக நேரம் எடுக்கும் பயிற்சியைத் தவிர்த்து, வெள்ளை நிற பந்துகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். உண்மையைச் சொல்வதானால், தேர்வாளர்கள், புவனேஷ்குமார் 10 ஓவர்கள் கூட பசி வேட்கையுடன் பந்து வீசுவதை காணவில்லை. ஆகையால், இனி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மறந்து விட நேரிடும். இது டீம் இந்தியாவின் இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஒரு இந்திய பவுலர் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அது புவனேஷ் குமாராக தான் இருந்திருக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிக்கு பேரிழப்பு
ஆக, TOI அறிக்கையின் படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பந்து வீசும் ஆர்வம் புவனேஷ் குமாருக்கு இல்லை என்பதால் தான் அவர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அதேசமயம், அவர் எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு தீவிரமாக தயாராகும் முடிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை, இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், நிச்சயம் புவனேஷ் இல்லாதது அணிக்கு பேரிழப்பாகும்.