நோ அஷ்வின்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, காயமடைந்திருக்கும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவனில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
முன்னாள் வீரர்கள் கணிப்பு
இந்த லண்டன் ஓவல் பிட்ச், விளையாட விளையாட மெதுவான தன்மை கொண்ட பிட்சாக மாறிவிடும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனால், இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மன் என்று பலரும் அஷ்வின் நிச்சயம் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்தனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக, அச்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்றே தெரிவித்தார். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அஷ்வின் அணியில் இல்லை என்பது கோலி அறிவித்த பிளேயிங் லெவன் போது உறுதியானது.
வாய்த்திறக்காத கோலி
டாஸ் போட்ட பிறகு பேசிய விராட் கோலி, "அணியில் 2 மாற்றங்கள் செய்துள்ளோம். காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா விலகியுள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், முகமது ஷமியும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதில் ஷர்துல் தாகூர் விளையாடுகிறார் என்று சொன்னாரே தவிர, அஷ்வின் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஜடேஜா பற்றியும் பேசவில்லை. ஜடேஜா ஏற்கனவே காயத்தில் சிக்கியிருந்ததால், அவர் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் அணியில் இடம் பிடித்திருந்தார். "ஜடேஜாவுக்கு காயம் குணமாகிவிட்டது.. அதனால் அவர் விளையாடுகிறார்" என்று கூட கோலி கூறவில்லை. ஏனெனில், ஜடேஜா பற்றி பேசினால், அஷ்வினை பற்றி நிச்சயம் கேட்பார்கள் என்பது கோலிக்கு தெரியும். எனவே, வேண்டுமென்றே அந்த போர்ஷனையே அவர் அவாய்ட் செய்தார்.
நான்கு இடது கை வீரர்கள்
ஆனால், கேள்வி கேட்பவரோ கோலியை விடுவதாய் இல்லை. அவர் கோலியிடம், "அஷ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏன் அவரை அணியில் சேர்க்கவில்லை?" என்று வெளிப்படையாகவே கேட்டுவிட, "விட மாட்டாய்ங்க போலயே" என்று வேறுவழியின்றி வாய் திறந்தார் கேப்டன் கோலி. இதுகுறித்து அவர், "இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை வீரர்கள் (பேட்ஸ்மேன்கள்) உள்ளனர். ஆகையால், அவர்களுக்கு ஜடேஜாவால் சிறப்பாக பந்து வீச முடியும். இந்த மேட்சில் அவர் அசத்த முடியும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் ஓவர் தி விக்கெட் வந்து பந்து வீச முடியும். அதுமட்டுமின்றி, நம்பர்.7வது வீரராக அவர் களமிறங்குவது முக்கியமானது" என்று அஷ்வின் சேர்க்கப்படாததற்கு தனது தன்னிலை விளக்கத்தை கொடுத்தார் கேப்டன் கோலி.