டெல்லி: 7வது ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது ஏன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
7வது ஐபிஎல் முதல் கட்ட போட்டிகள் வரும் 16-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. அதன் பின்னர் 2வது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒரு கடிதத்தை நேற்று அனுப்பி வைத்துள்ளது. அதில், ஐ.பி.எல். போட்டிகளில் ஒரு பகுதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குறிப்பிடக் கூடிய இடங்களில் நடத்தாமல் வேறு சில இடங்களில் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என்று அறிவித்து அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் திடீரென கேள்வி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.