சர்வதேச அளவில் கவனம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
சர்ச்சையான சச்சின் ட்வீட்
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.
சச்சின் அதிர்ச்சி
சச்சின் டீவீட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. சச்சின் போன்றவர்கள் இதற்கு முன்பே விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தால், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட போகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
யார் ஷரபோவா?
இது ஒருபுறமிருக்க, கடந்த 2014 ஆண்டு ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் சச்சின் குறித்து கேட்டதற்கு 'அவரை எனக்கு தெரியாது' என்று பதில் அளித்திருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் ஷரபோவாவின் சமூக தள பக்கங்களில் கடும் எதிர்வினையாற்றினார். யார் ஷரபோவா? எனும் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது.
மன்னிப்பு கேட்ட கேரள ரசிகர்கள்
குறிப்பாக, கேரள ரசிகர்கள் ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்தில் அவர் 'விட்ருங்க டா' என்ன என்று சொல்லும் அளவுக்கு தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர். ஆனால், இப்போது விவசாயிகள் போராட்டம் குறித்த சச்சின் டீவீட்டை தொடர்ந்து, அதே கேரள ரசிகர்கள் விதவிதமாக ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.
வயநாடு வாங்க ஷரபோவா
'நீங்கள் சொன்னது சரி தான்.. யார் அந்த சச்சின்' என்று ஒருவரும், 'நீங்கள் தெரிந்து கொள்ள கூடிய அளவுக்கு சச்சின் ஒரு ஆள் இல்லை' என்று மற்றொருவரும், 'நாங்கள் உங்களை திட்டியதற்கு தீர்வாக, நீங்கள் வயநாடு வந்தால் உங்களை நன்றாக கவனித்து அனுப்புகிறோம்' என்று கிட்டத்தட்ட 4000 மலையாளிகள் இதுபோன்று ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டு டீவீட்டியுள்ளனர்.