டெல்லி: ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் கவுரவம் சமீபத்தில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிடுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஐந்து இந்தியர்கள் மட்டுமே இந்த கவுரவத்தைப் பெற்றுள்ளனர். அதெல்லாம் சரி, அப்ப சச்சின் டெண்டுல்கர் செய்ததெல்லாம் சாதனையில்லையா, அவரை ஏன் சேர்க்கவில்லை என்று கிரிக்கெட் கடவுளின் பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி. கிரிக்கெட் சாதித்த வீரர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் என்ற பிரபலமான வீரர்கள் பட்டியலில் சேர்க்கிறது. இந்தப் பட்டியில் இந்தியாவில் இருந்து கபில் தேவ், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சமீபத்தில் ஐசிசி அறிவித்த பட்டியலில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கிளாரி டெய்லரும் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணைந்தனர்.
இந்தியாவுக்கு 164 டெஸ்ட்கள், 344 ஒருதினப் போட்டிகள், ஒரே ஒரு டி-20 போட்டிகளில் விளையாடி, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில், 31,258 பந்துகள் விளையாடி, அதிக பந்துகள் விளையாடிய சாதனைக்கு சொந்தக்காரர்.
ராகுல் டிராவிடுக்கு ஹால் ஆப் ஃபேம் கவுரவம் வழங்கப்பட்டதில் எந்த மாற்றக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பாரத ரத்னா விருது பெற்றுள்ள கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான், ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது.
அதற்கு பெரிய காரணம் ஏதுமில்லை. ஐசிசி விதிகளின்படி, கடைசியாக ஐந்து ஆண்டுகளில் எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாதவர்களே, ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
சாதனைகள் புரிவதில் சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுகர், 2013 நவம்பரில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஐந்து ஆண்டுகள் முடியாததால், அவர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அவர் ஹால் ஆப் ஃபேமில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று நம்புவோம்.