சிறப்பான சோயிப் அக்தர்
முன்னாள் பாகிஸ்தான் பௌலர் சோயிப் அக்தர் தன்னுடைய கேரியரில் சிறப்பான பல சாதனைகளை புரிந்தவர். சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கவனம் ஈர்த்தவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தொடர்ந்து கிரிக்கெட் குறித்த விமர்சனங்களை செய்து வருகிறார். யூடியூப் மூலமும் பல்வேறு தளங்களிலும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்.
ரோகித், விராட்டை புகழ்ந்த அக்தர்
இந்நிலையில் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறித்து விமர்சித்த சோயிப் அக்தர், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் அக்தரை வறுத்தெடுத்துவிட்டனர்.
விராட், ரோகித்திடம் விஷயம் உள்ளது
இந்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு பேசியுள்ள அக்தர் தான் ஏன் விராட் கோலியையும் ரோகித் சர்மாவையும் புகழக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளர். இநத தலைமுறையின் சிறப்பான வீரர்கள் அவர்கள் என்று கூறியுள்ள அக்தர், பாகிஸ்தான் அல்லது உலக அளவில் எந்த வீரராவது கோலியின் சாதனைகளுக்கு அருகில் வரமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த வீரராவது நெருங்க முடியுமா?
கோபப்படுவதற்கும் தன்னை விமர்சனம் செய்வதற்கும் முன்னதாக கோலியின் சாதனைகளை நாம் பார்க்க வேண்டும் என்றும் தன்னுடைய கேரியரில் 70 சதங்களை விராட் வைத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் எத்தனை தொடர்களை அவர் இந்தியாவிற்காக வென்று கொடுத்துள்ளார் என்று கூறியுள்ள அக்தர், கோலி மற்றும் ரோகித்தை புகழ்ந்தால் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார்.