உலக கோப்பையில் இரு நாடுகளும்
பிரேசிலில் தற்போது கால்பந்தாட்ட உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. அதேபோல இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் சேர்ந்து 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை நடத்தின. ஆனால் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களிலும், இந்தியா விளையாட போட்டிகளின் போது பாதி நாற்காலிகள் காலியாகத்தான் கிடந்தன.
இந்திய ஸ்டேடியம் காலி..
பிரேசிலின் குட்டி நகரமான குயிபா, கால்பந்தாட்டத்தில் வெறி ஊறிய பகுதி கிடையாது. ஆனால் அந்த ஊரில் நடந்த கால்பந்தாட்டங்களில் எந்த அணிகள் மோதிக்கொண்டாலும், ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியிருந்தார்கள். தென்ஆப்பிரிக்காவும், மேற்கிந்திய தீவுகளும் டெல்லியில் மோதிய கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டேடியத்தில், நாய்களும், நாற்காலியில் தூசியும்தான் அதிகம் காணப்பட்டன.
பிரேசிலில் அப்படியில்லை..
பல லட்சம் மக்கள் தொகையை கொண்ட டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் கூட முன்னணி கிரிக்கெட் அணிகள் விளையாடியபோது ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் இல்லாத நிலையில், குட்டி ஊரான குயிபாவில் தென்கொரியாவும்-ரஷ்யாவும் மோதிய போட்டியை பார்க்க கூடிய பிரேசில் ரசிகர்களுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எப்படி ஒப்பிட முடியும்?
வீரர்களைதான் ரசிக்கிறார்கள், விளையாட்டையல்ல!
இந்தியாவில் தங்கள் நாட்டு அணியே விளையாடினாலும் கூட, சில குறிப்பிட்ட பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும்வரைதான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருக்கின்றனர். தங்களுக்கு விருப்பமான பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டால் நடையை கட்டிவிடும் ரசிகர்களை இந்தியாவில் அதிகம் பார்க்க முடிகிறது.
டிக்கெட்டுக்கு பணமில்லையா?
பிரேசிலைவிட இந்தியாவில் வறுமை அதிகம் எனவேதான், ஸ்டேடியத்திற்கு டிக்கெட் எடுத்து ரசிகர்கள் வர ஆர்வம் காட்டுவதில்லை என்று சப்பைகட்டு கட்டுபவர்களும் உள்ளனர். ஆனால் பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் சிறு செலவு செய்து கிரிக்கெட் போட்டியை பார்க்க வர முடியாது என்று கூறுவதை நம்ப முடியாது. இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விலை மிகவும் குறைவு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கட்டுப்பாடு அதிகம்
இந்திய கிரிக்கெட் மைதானங்களில் கட்டுப்பாடு அதிகம் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். கேமரா, சுயிங்கம், ஆணுறை போன்ற எதையும் பைக்குள் வைத்து எடுத்துச் செல்ல இந்திய ஸ்டேடியங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இப்படித்தான் சென்னை கிரிக்கெட் மைதானத்திற்குள் சென்றபோது, சில்லரைகளை எடுத்துச் செல்ல கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் அதை எடுத்து வைத்துக்கொண்டனர். ஸ்டேடியத்திற்குள்ளே உள்ள குளிர்பான கவுண்டரில், நான் குளிர்பானம் வாங்க சென்றபோது மீதி பணமாக சில்லரையைத்தான் எனக்கு தந்தனர். இதுதான் அங்குள்ள பாதுகாப்பு நிலவரம்.
டிவியில் பார்க்கிறார்கள்
பிரேசிலில் ரசிகர்களை கவரும் முயற்சியை மைதான நிர்வாகங்கள் செய்கின்றன. மேலும், வாங்க.. வாங்க.. என்று ரசிகர்களை அழைப்பதை போன்ற ஒரு தோற்றத்தை பிரேசில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவிலோ ஸ்டேடியத்தைவிட டிவியில் போட்டிகளை பார்ப்பதையே ரசிகர்கள் எளிதாக கருதுகிறார்கள்.
பிரேசிலில் டிவி பார்ப்பதில்லையே!
தொலைக்காட்சியை காரணம் காண்பித்துவிட்டு ஸ்டேடியத்துக்கு வராமல் இருப்பதற்கான வாய்ப்பு, பிரேசில் ரசிகர்களுக்கு அதிகம் உள்ளது. ஏனெனில் கால்பந்தாட்டத்தில் கிரிக்கெட்டைப்போல அவ்வப்போது விளம்பர இடைவேளை வருவதில்லை. ஆட்டத்தின் நடுபகுதியில் மட்டுமே விளம்பரம் காண்பிக்கப்படுகிறது. அப்படியிருந்தும் பிரேசில் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஸ்டேடியத்தை நோக்கிதான் வருகிறார்கள்.
பிரேசிலுக்கு வாழ்நாள் அனுபவம்
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் 1950க்கு பிறகு இப்போதுதான், பிரேசிலில் நடக்கிறது. அதாவது 64 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு. ஆனால் இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட்டுக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. 2023ல் மீண்டும் இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. அது இந்தியாவில் நடக்கும் 4வது உலக கோப்பை கிரிக்கெட்டாக இருக்க போகிறது. ஆனால் பிரேசிலியர்களுக்கு இந்த உலக கோப்பை வாழ்நாள் அனுபவம் என்பதை மறுத்துவிட முடியாது.
ரசிக்கும் பக்குவம் இல்லை
இந்திய கிரிக்கெட் ரசிகர்களைவிட பிரேசில் கால்பந்து ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதிலும், தோல்வியை ஏற்கும் பக்குவத்திலும் மேம்பட்டுள்ளனர். 1996ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றபோது, இந்திய வீரர்கள் வீடுகள் தாக்கப்பட்டன. அசாருதீன், ஜடேஜா உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. சச்சினை தவிர அத்தனை பேரும் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் 7-1 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றபோதும், பிரேசில் வீரர்கள் பத்திரமாகத்தான் உள்ளனர்.
கோயிலுக்கு செல்லாத மதமா?
1996 உலக கோப்பை போட்டியின்போது, ஊட்டியின் தெருக்களில் மக்கள் கூட்டமாக நின்று, தொலைக்காட்சி விற்பனை கடைகளில் காண்பிக்கப்பட்ட கிரிக்கெட்டை பார்த்து ரசித்தனர். ஆனால் 2011ல் ஸ்டேடியம் வெறிச்சோடி கிடந்தது. இந்த ஒப்பீடுகளின்படி ஐந்து வாரமும் ஸ்டேடியத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பிரேசில் கால்பந்தாட்ட ரசிகர்கள்தான், இந்திய கிரிக்கெட் ரசிகர்களைவிட மேம்பட்டவர்களாகும். கோயிலுக்கே (ஸ்டேடியம்) செல்லாமல், கிரிக்கெட்டை நாங்கள் ஒரு மதமாக பார்க்கிறோம் என்று இந்திய ரசிகர்கள் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.