வாய்ப்பு இல்லை
இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் கலக்கிய ருத்ராஜ் கெயிக்வாட், தேவ்தத் பட்டிக்கல், பிரித்வி ஷா, இஷான் கிஷான், தீபக் சஹார் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
என்ன காரணம்
ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நடராஜன், முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய போது அவருக்கு வலி அதிகமானது. இதனால் உடனடியாக அவர் ஐபிஎல்-ல் இருந்து விலகி அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதே போல இங்கிலாந்து தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இருவருமே இன்னும் முழுமையாக காயத்தில் இருந்து மீளாததால் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.
உலகக்கோப்பை வாய்ப்பு
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி தேர்வு செய்வதில் இலங்கை தொடரும் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் டி.நடராஜன் அந்த வாய்ப்பை இழந்திருக்கின்றனர். இதனால் டி20 உலகக்கோப்பையில் இவர்கள் இருவரின் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
சுற்றுப்பயணம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.