நியூசிலாந்து டி20 தொடர்
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த தொடரை 5 - 0 என வென்று அசத்தியது இந்திய அணி. அந்த தொடரில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், தொடர் வெற்றியால் அது பற்றி அதிக விமர்சனம் எழவில்லை.
ஒருநாள் தொடர் தோல்வி
அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளையும் வென்று பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இந்திய அணியின் தவறுகள் பட்டியலிடப்பட்டு, பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
விக்கெட் எடுக்கத் திணறல்
குறிப்பாக, ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுக்க தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து தான் அதிகம் விமர்சிக்கப்பட்டது. பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது.
அஸ்வின் ஏன் இல்லை?
அஸ்வின் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அஸ்வின் நீண்ட காலமாகவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறாமல் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட, குல்தீப் யாதவ் பார்ம் இழந்து தவித்து வருகிறார்.
ஐபிஎல்-இல் அஸ்வின்
அதே சமயம், அஸ்வின் கடந்த ஐபிஎல் தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி போட்டி போட்டு வாங்கியது. எனினும், அவருக்கு டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் அளித்து வருகிறது இந்திய அணி.
கடைசி போட்டி
கடந்த 2017 ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தான் அஸ்வின் கடைசியாக ஆடிய ஒருநாள் தொடர். அதன் பின் அவர் டி20 அணியிலும், ஒருநாள் அணியிலும் இடம் பெறவில்லை. அப்போது முதலே அவரை குறைந்த ஓவர் போட்டிகளுக்கான அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
ஜிண்டால் விமர்சனம்
அஸ்வின் இடம் பெற்று இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் அஸ்வினை ஏன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை என தெரியவில்லை என கூறி தன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
என்ன சொன்னார்?
"அஸ்வின் ஏன் இந்த (ஒருநாள்) அணியில் இல்லை. விக்கெட் எடுப்பவர்களை அணியில் எடுப்பதில் ஒரு வெறுப்பு உள்ளது. டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வைட்வாஷ் செய்த பின், நியூசிலாந்து அணி உலகக்கோப்பை அரையிறுதியில் அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவில்லை என காட்டியுள்ளது" என்று கூறி இருக்கிறார் பார்த் ஜிண்டால்.
விக்கெட் எடுப்பவர்கள் வேண்டும்
"இந்திய அணியில் விக்கெட் எடுப்பவர்கள் மற்றும் எக்ஸ் ஃபேக்டர் கொண்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்" என்றும் கூறி இருக்கிறார் பார்த் ஜிண்டால். தன் அணி வீரர் அணியில் இடம் பெறவில்லை என்பதால், இந்திய அணியை ஜிண்டால் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.