அதிர்ச்சி தொடக்கம்
முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். இதனால் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து 49/7
அதிரடி வீரர் டான் பான்டனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். சி.எஸ்.கே. வீரர் மொயின் அலி டக் அவுட் ஆனார். ஜேம்ஸ் வீண்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் இயன் மார்கன் போராடி 17 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். சாம் பில்லிங்ஸ்2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 49 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
103 ரன்களில் சுருண்டது
இறுதியில் கிறிஸ் ஜார்டன் 28 ரன்களும், ஆதில் ரஷித் 22 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து அணி 103 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி எந்த நெருக்கடியும் இன்றி விளையாடியது.
அபார வெற்றி
தொடக்க வீரர் பிராண்டன் கிங் அரைசதம் விளாச, சாய் ஹோப் 20 ரன்களும்,நிக்கோலஸ் பூரான் 27 ரன்களும் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி இலக்கை 17.1வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பொலார்ட் படை முன்னிலை பெற்றுள்ளது. 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டியை FANCODE ஆப்பில் காணலாம்.