ஒருநாள் போட்டி
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடரை 1 -2 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து நேற்று நார்த் சவுண்டில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணியில் குணதிலகா, கருணரத்னே மற்றும் பந்தரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், அந்த அணி 49 ஓவர்களில் 232 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
வெற்றி
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் லீவிஸ், சாஹி ஹோ சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய ஈவின் லீவிஸ் 65 ரன்களும், ஹோப் 110 ரன்களும் எடுத்தது. பின்னர் வந்த பிராவோவும் ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுட்
ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகா 55 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 22ம் ஓவரின் போது பொல்லார்டு வீசிய பந்து குணதிலகாவின் கையில் பட்டு அவர் அருகிலேயே விழுந்தது. பின்னர் குணதிலகா சிங்கிள் எடுக்க முற்பட்டார். ஆனால் பொல்லார்டு பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க முயற்சித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட குணதிலகா ரன் எடுக்காமல் பின் வாங்கினார். அப்போது பந்தையும் அவர் காலில் தட்டிவிட்டு பின் சென்றதால் (Obstructing The Field) பொல்லார்டால் ரன் அவுட்டாக்க முடியாமல் போனது.
சர்ச்சை
இதனால் கோபமடைந்த பொல்லார்ட் உடனடியாக களநடுவர் ஜோய் வில்சனிடம் முறையிட்டார். அவர் சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுத்துவிட்டு 3வது நடுவரின் முடிவுக்கு பரிந்துரைத்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸுக்கு ஆதரவாக முடிவு வந்தது. பந்தை காலில் தட்டிவிட்டமைக்காக குணதிலகாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு ஒரு புறம் ஆதரவு வந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் இந்த காரணத்திற்கு எல்லாம் அவுட் தருவதா எனக்கூறி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பொல்லார்ட்டை திட்டி வருகின்றனர்.