ஹாட் டாபிக்
இந்த நிலையில் தான், இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில். இப்போட்டிக்கான பிளேயிங் லெவன் பஞ்சாயத்து தான் இப்போது ஹாட் டாபிக். இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தாலும், அணியின் லெவனில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. முக்கியமாக மிடில் ஆர்டர் மாற்றம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கி, 2வது டெஸ்ட் போட்டி வரை, இந்தியாவின் பெரும் பின்னடைவாக இருப்பது மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பல் தான். புஜாரா, கேப்டன் கோலி மற்றும் ரஹானேவின் ஆட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிவிட்டது.
சூர்யா? மாயங்க்?
ஸோ, புஜாராவுக்கு பதில் வெளியே அமர்ந்திருக்கும் மாயங்க் அகர்வால் அல்லது சூர்ய குமார் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதாவது, புஜாராவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை விட, அவருக்கு சிறிது ஓய்வு கொடுத்து வெளியே உட்கார வைக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதேசமயம், மீண்டும் புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் மறு தரப்பில் எழுகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். முழுதாக 50 ஓவர்களை எதிர்கொண்டனர். ஒருநாள் போட்டியில் ஒரு அணியே முழுமையாக பேட்டிங் செய்யும் ஓவர்கள் எண்ணிக்கை இது.
தவிர்க்கப்படும் அஷ்வின்
பேட்டிங்கில் இப்படி ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்க, பவுலிங்கில் இதைவிட சற்று காரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய பவுலிங் கேம்ப்பில் சிறப்பாக பந்து வீசிய ஒரே பவுலர் அஷ்வின் மட்டும் தான். பும்ராவே அன்று எடுபடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில், அஷ்வினின் பேக் டூ பேக் விக்கெட்ஸால் நியூஸிலாந்தே ஒரு நொடி ஆடிப்போனது. ஆனால், இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.
ஜடேஜா vs அஷ்வின்
ஜடேஜாவை பொறுத்தவரை, அவர் அஷ்வினை விட பெட்டர் ஸ்பின்னர் கிடையாது. ஆனால், அஷ்வினை விட சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர். அதேசமயம், தனக்கு ஏற்ற பிட்ச் அமைந்துவிட்டால், எதிரணியை மொத்தமாக காலி செய்துவிடுவார். அந்த "தனக்கு ஏற்ற பிட்ச்" என்பதில் தான் பிரச்சனையே. அஷ்வினை பொறுத்தவரை அது எப்பேர்ப்பட்ட கடினமான பிட்சாக இருந்தாலும், பேட்ஸ்மேன்களை முடிந்த அளவுக்கு திணற வைத்துவிடுவார். அதுதான் அஷ்வினின் எபிலிட்டி. இந்த வித்தியாசங்களால் தான் ஜடேஜாவை அணியில் சேர்ப்பதா? அல்லது அஷ்வினை அணியில் சேர்ப்பதா? என்று கேப்டன்கள் குழம்புகின்றனர். இதில், விராட் கோலியை பொறுத்தவரை அவர் தெளிவாக தான் இருக்கிறார். பிட்சை முதலில் ரீட் செய்கிறார். பிறகு அந்த பிட்சுக்கு ஏற்ற பவுலர் யார் என்பதை கெஸ் செய்கிறார். அந்த வகையில் தான் ஜடேஜா அணியில் இடம் பிடித்தார்.
நழுவும் கோலி
ஆனால், இரண்டு போட்டியிலும் ஜடேஜாவால், பவுலிங்கில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. விக்கெட்டை விடுங்க.. அவரால் சுத்தமாக துளி இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை. அதனால் தான் ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. எனினும், நேற்று (ஆக.24) நடந்த பிரஸ் மீட்டில் கேப்டன் விராட் கோலியிடம், அணியில் மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "காயம் ஏற்படாதவரை ஏன் அவர்களை மாற்ற வேண்டும்? அணியில் மாற்றம் ஏற்படுத்த எந்த காரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை, வெற்றி அணியை ஏன் மாற்ற வேண்டும்? வெற்றிப் பெற்ற அணியின் காம்பினேஷனை எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அஷ்வினை பொறுத்தவரை, ஹெட்டிங்லே பிட்ச் நான்காவது மற்றும் ஐந்தாம் நாளில் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை ஆய்வு செய்து, அதன் பிறகே அவரை சேர்ப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படும்" என்றும் கூறியுள்ளார். கோலி சொல்லியிருப்பதையும் நாம் நிச்சயம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். உலகின் எந்த கேப்டனும், ஒரு வெற்றிப் பெற்ற அணியின் காம்பினேஷனில் அடுத்த போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பமாட்டார். இன்னும் சொல்லப்போனால், 'யாருக்கும் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது. இதே அணியே விளையாட வேண்டும்' என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் கோலி பக்கம் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். ஆனால், அஷ்வின் போன்ற 90% பவுலிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடிய பவுலரை வெளியே உட்கார வைத்து, ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத ஜடேஜாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பதில் என்ன வின்னிங் காம்பினேஷன் பாதிக்கப்பட்டுவிடப் போகிறது? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.