சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டி
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி அபுதாபியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. இதற்கென வீரர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லின் 8 அணிகளில் இணைந்துள்ள நிலையில், மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இணைய வேண்டியுள்ளது.
17ம் தேதி யூஏஇ வருகை
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் தற்போது போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதை முடித்துக் கொண்டு வரும் 17ம் தேதி அவர்கள் சார்ட்டர்ட் விமானங்கள் மூலம் மான்செஸ்டரில் இருந்து யூஏஇ வரவுள்ளனர். அங்கு குவாரன்டைனை முடித்துக் கொண்டு, 23ம் தேதி வாக்கில் அவர்கள் அணிகளில் இணைந்து தங்களது போட்டிகளை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுரவ் கங்குலிக்கு கோரிக்கை
இந்நிலையில், இந்த குவாரன்டைன் காலத்தை 3 நாட்களாக குறைக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மூத்த வீரர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். முதலில் ஆஸ்திரேலியாவிலும் பின்னர் இங்கிலாந்திலும் தாங்கள் பயோ பபள் முறையில் தான் இருப்பதாகவும் இங்கிலாந்தில் குவாரன்டைனை மேற்கொண்டு மேலும் தொடர் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்குலிக்கு விளக்கம்
மற்ற வீரர்களின் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஹோட்டல் அறையிலும் மற்றவர்களின் தொடர்பு இல்லாமல்தான் இருப்பதாகவும் அதனால் தங்களது குவாரன்டைனை குறைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி என்ன முடிவெடுப்பார் என்பதை அடுத்து அந்த வீரர்கள் முதல்கட்ட போட்டிகளில் பங்கேற்பது குறித்த தெளிவு ஏற்படும்.