அதகள சிஎஸ்கே
குறிப்பாக, பார்த்தாலே பச்சக்கென்று பிடித்துக் கொள்ளும் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், மாலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை, பலரையும் வெளியே எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்ட மகத்தான பணியை செய்து வந்தது ஐபிஎல் 2021. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நம்மூரில் ரசிகர்களில் பலர், சிஎஸ்கே அணிக்காக மட்டுமே ஐபிஎல் பார்ப்பார்கள். எல்லாப் போட்டிகளையும் பார்ப்போர் எண்ணிக்கை, இவர்களை விட குறைவு. அந்த வகையில், 2021 சீசனில் ரணகளமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதகளப்படுத்தியது தோனி ஆர்மி. ரசிகர்களுக்கோ ஏக குஷி. மீம்ஸ்கள் சமூக தளங்களை ஆக்கிரமிக்க, கொரோனா கொடுமையை அட்லீஸ்ட் ஒரு நான்கைந்து மணி நேரத்திற்காவது மறந்தனர் மக்கள். ஆனால், வீரர்களையே கொரோனா டார்கெட் பண்ண, இப்போது தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கன்சிஸ்டண்சி ஆர்மி
எல்லாம் சரி.. போன 2020 ஐபிஎல் சீசன், நவம்பர் மாதம் தான் முடிந்தது. வெறும் ஐந்தே மாத கேப்பில், 2021 சீசன் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2020 சீசனில், இதுவரை ஐபிஎல் ரெக்கார்டில் இல்லாத அளவுக்கு மோசமான காலத்தை அனுபவித்தது சிஎஸ்கே. முதன்முறையாக, தோனி தலைமையிலான 'கன்சிஸ்டண்சி ஆர்மி' பிளே ஆஃப் செல்லாமல் தொடரை விட்டு வெளியேறியது.. அதுவும் 7வது இடத்தைப் பிடித்து. மற்ற அணிகள் ரசிகர்கள் டிசைன் டிசைனாக 'ட்ரோல்' செய்தனர்.
ஆச்சர்யம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம், தோனியின் அவுட் ஆஃப் ஃபார்ம், ரெய்னா மிஸ்ஸிங், மூச்சு வாங்கிய வாட்சன், சுழலாத டு பிளஸிஸ் பேட், பிலோ ஆவரேஜ் ஓப்பனிங், அக்ரெஸிவ் மறந்து டிஃபன்ஸ் ஆடியது, யுஏஇ பிட்சில் ஸ்பின் கைக் கொடுக்காதது, பிராவோ எதுக்கு அணியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், இவை அனைத்தும், ஐந்தே மாதத்தில் எப்படி காணாமல் போனது என்பது தான் ஆச்சர்யம்!.
ஒரே வார்த்தை
டு பிளஸிஸ் மேட்சுக்கு மேட்ச் 50 அடிக்கிறார், ராயுடு வாண வேடிக்கை காட்டுறார். ஜடேஜா '3டி' பெர்ஃபாமன்சில் பின்றார், பவர்பிளேயில் தீபக் சாஹர் விக்கெட்டுகள் கைப்பற்றாத மேட்சுகளே இல்லை.. 'நான் தான் டீமோட ஃபியூச்சர்' என்று சாம் கரண் மேட்சுக்கு மேட்ச் நம்பிக்கை தர்றார்.. இப்படி சிஎஸ்கே அசத்தும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன்.. கேப்டன் தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார். பட்.. ஒரு விஷயம் மட்டும் உண்மை. இங்கு மாயமோ, மந்திரமோ எதுவும் நிகழவில்லை. இந்த கம்பேக்கின் ஒரே காரணம் 'பிராசஸ்'. ஆம்! தோனியும், கோச் ஃபிளமிங்கும் எப்போதும் உச்சரிக்கும் அதே வார்த்தை, ஒரே வார்த்தை 'பிராசஸ்'.
ஆல் டைம் ஃபார்முலா
எந்த டோர்னமெண்ட்டாக இருந்தாலும், எங்கு நாம் விளையாடினாலும், நாம் எப்போதும் நமக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே இருவரின் கோட்பாடு. ரிசல்ட் பற்றி எல்லாம் கவலை இல்லை. நீங்கள் வரிசையாக நான்கு மேட்ச் தோற்றாலும், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ஐந்தாவது மேட்ச்க்கு தேவையான தயாரிப்பில் மட்டும் பக்காவாக நாம் கவனம் செலுத்தி செயல்பட்டால் போதும்.. வெற்றி ஐந்து ஐந்தாவது மேட்சில் கிடைக்கவில்லை என்றாலும், ஆறாவது மேட்சில் இருந்து கிடைத்துவிடும் என்பதே சிஎஸ்கே-வின் வெற்றி ஃபார்முலா. குறிப்பாக, தோனியின் ஆல் டைம் ஃபார்முலா.
கமபேக் கொடுக்குமா சிஎஸ்கே
இதே பாணியில் தான் 2020 சீசனை மறந்து, 2021 சீசனுக்கான தயாரிப்பு பணியில் தீவிரமாக சிஎஸ்கே நிர்வாகம் செயல்பட, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், கொரோனா மீண்டும் நம்மை சோதிக்க, போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது. நமக்கு கிடைத்த தகவலின் படி, அக்டோபரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர், யுஏஇ-க்கு மாற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் பிறகு அங்கேயே மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால், இப்போது மீண்டும் நான்கைந்து மாதங்கள் கேபி ஏற்படுவதால், சிஎஸ்கே மறுபடியும் தங்களது அதே ஃபார்மை வெளிக் கொண்டுவருமா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால், அதற்கும் தோனியிடம் இருந்து கிடைக்கும் ஒரே பதில் 'பிராசஸ்'.