பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் இந்தியா ரோஹித் சர்மாவின் அபார சதத்தால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று பிரிஸ்டலில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களைக் குவித்தது. ஜேசன் ராய் 67, ஜோஸ் பட்லர் 34, ஹேல்ஸ் 30, பேர்ஸ்டோ 25 என ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவின் ஹர்டிக் பாண்ட்யா பிரித்து எடுத்து விட்டார் பந்து வீச்சில். 4 ஓவர்கள் வீசிய அவர் 4 விக்கெட்களைச் சாய்த்தார். சித்தார்த் கெளல் 2, தீபக் சஹர் 1, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மிகப் பெரிய இலக்கை துரத்தத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெளுத்துக் கட்டிய அவர் 100 ரன்கள் குவித்து இங்கிலாந்தை புரட்டி விட்டார்.
கேப்டன் விராத் கோஹ்லி மறுபக்கம் 29 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார். ஆனால் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கிலும் இன்று இங்கிலாந்தை கலக்கி விட்டார். 14 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியா 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. மேன் ஆப் தி மேட்ச் ரோஹித் சர்மா.
முதலாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களையும், ராகுல் சதம் அடித்தும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழல் மாயம் பலிக்கவில்லை. பரபரப்பாக நடந்த போட்டியில், கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 14 ரன்களை எடுத்தபோது டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில்தான் கோஹ்லியும் 2000 ரன்களைக் கடந்தார் என்பது நினைவிருக்கலாம்.