நியூசி., 101 ரன்கள்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஆட்டம் பாதிப்பு
இந்நிலையில், நான்காம் நாளான இன்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்வதால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி, காலை 10 மணிக்கு 100 சதவிகிதம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், ஒரு மணி நேரமாகியும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. காலை 11 மணிக்கு 98 சதவிகித மழை வாய்ப்பும், மதியம் 12 மணிக்கு 95 சதவிகித மழை வாய்ப்பும் உள்ளதாக கூறியுள்ளது.
நோ அட்டாக்
இந்நிலையில், இந்தியாவை விட தற்போது நியூசிலாந்து 116 ரன்கள் பின்தங்கி உள்ளது. இப்போது அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சொல்வதைவிட, இந்திய அணியின் பவுலர்கள் சுமாராக பந்து வீசுகிறார்கள் என்று சொல்லலாம். 11 ஓவர்கள் வீசியுள்ள பும்ராவால், ஒரு பந்தில் கூட நியூசி., பேட்ஸ்மேன்களை அச்ச்சுறுத்தவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம். ஷமி சிறப்பாக பந்து வீசியும், அவருக்கு லக் இல்லை. இஷாந்த் நன்றாகவே வீசினார். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தோமெனில், நம்முடைய ஃபாஸ்ட் பவுலர்களால், நியூசிலாந்து சீமர்ஸ்களை போல ஒரு யூனிட்டாக அட்டாக் செய்ய முடியவில்லை.
அதே சிக்கல்
இந்த நிலையில், மழையும் அவ்வப்போது சேர்ந்து டார்ச்சர் கொடுப்பதால் போட்டி மீதான வீரர்களின் பிடிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. நியூசிலாந்து வீரர்களுக்கு இந்த கண்டிஷன்ஸ் பழக்கப்பட்டது என்பதால், அவர்கள் இதனை எளிதாக கடந்து செல்ல முடியும். ஆனால், இந்திய வீரர்களுக்கு இந்த மாறும் வானிலையும், அவ்வப்போது நிறுத்தப்படும் ஆட்டமும் சலிப்பையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை விட இந்த பிரச்னைக்கு ஒரு சரியான சாம்பிள் காட்ட முடியாது. இதே நியூஸிலாந்து அங்கு எதிரான அப்போட்டியில் தான், அடிக்கடி குறுக்கிட்ட மழையால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. இப்போது மீண்டும் அதே போலொரு சிக்கலை, சூழலை இந்திய அணி சந்தித்துள்ளது.
வெற்றிக்கும் வாய்ப்பு
உலகக் கோப்பையில் ஏமாந்தது போல, தன்னம்பிக்கையை இழக்காமல், எத்தனை தடவை மழை குறுக்கிட்டாலும், அதே எனர்ஜியை கையாண்டால், இந்திய அணி குறைந்தபட்சம் தோல்வியில் இருந்தாவது தப்பிக்கலாம். அதேசமயம், இந்திய பவுலர்களின் ஆதிக்கம் இனிமேலாவது எழத் தொடங்கினால் இந்திய அணியால் வெற்றிப் பெறவும் ஒருசில வாய்ப்புகள் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.