மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவில்தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இன்று (செப்.8) உலகக் கோப்பைக்கான இந்திய அணி வெளியாகவுள்ளதாக தெரிகிறது. அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. ஓரளவுக்கு நாம் யூகித்த வகையில், இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன், புவனேஸ்வர் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மூன்று மாற்று வீரர்களாக நடராஜன், சிராஜ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இதில் குறிப்பாக, நடராஜன் அணியில் இடம் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், டி20 போட்டிகளில் டெத் ஓவர்களில் அவர் வீசும் யார்க்கர்களே. இந்த டி20 உலகக் கோப்பை நடப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில். மீடியம் பேஸ் மற்றும் ஸ்பின் பந்துகளே இங்கு எடுபடும். கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற உலக லெவல் பவுலர்கள் இங்கு நிச்சயம் திணறுவார்கள். அவர்களது லைன் அண்ட் லெந்த் பந்துகள் எல்லாம் இங்கு எடுபடாது. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆசிய அணிகளே இங்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, வங்கதேசம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில், இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
அப்படிப்பட்ட அமீரக பிட்சில், இந்திய அணியில் பும்ரா, நடராஜன் ஆகியோர் இணைந்து விளையாடுவது, எதிரணிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும். இருவரும் மாறி மாறி வீசும் யார்க்கர்கள், நிச்சயம் இம்பேக்ட் ஏற்படுத்தும். இவர்களுடன் ஷமியும் சேர்ந்தால், இந்திய அணியின் பவுலிங், உலகக் கோப்பை அணிகளில் வலிமையான ஃபேஸ் அட்டாக்காக அமையும். ஸோ, நடராஜன் நிச்சயம் அணியில் சேர்க்கப்பட வேண்டும். பும்ரா + நடராஜன் + ஷமி. இளமை ப்ளஸ் அனுபவம் சேர்ந்த கலவை நிச்சயம் எப்பேர்ப்பட்ட எதிரணியாக இருந்தாலும் பயமுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது காயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் சரி.
ஒரு பெண் 2 முறை விவாகரத்து செய்தால் என்ன தவறு? ஷிகர் தவானை பிரிந்த ஆயீஷா - குவியும் ஆதரவு