பல கேள்விகள்
அப்படிப்பட்டதிறன் வாய்ந்த புஜாராவை இப்போது வலை வீசித் தேடும் நிலையில் உள்ளது இந்திய அணி. வெளிநாடுகளில் இதுவரை மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா அடித்துள்ள ரன்கள் 2,640. ஆவரேஜ் 37.71. அதிகபட்ச ஸ்கோர் 193. இது அவரது கடந்த 10 ஆண்டுகால டிராக் ரெக்கார்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் பல கேள்விகளை எழுப்பியது. அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்ற கருத்து பரவலாக உள்ளது.
அதிகபட்ச ஸ்கோர் 77
ஆம்! கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 431 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 26.93. அதிகபட்ச ஸ்கோர் 77. இதில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் விளையாடி 271 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 ரன்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 60 ரன்களும் எடுத்திருக்கிறார்.
தோல்விக்கு காரணம்
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மிக பொறுமையாக விளையாடினாலும், அணிக்கு ஓரளவுக்கு தேவையான பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்கள் என மொத்தமாகவே 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. இவர் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு 40 ரன்கள் அடித்திருந்தால் கூட, இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கலாம்.
சொதப்பல்
கிரிக்கெட்டில் SENA என்ற ஒரு டெர்ம் உள்ளது. அதாவது, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை குறிக்கும் டெர்ம் இது. ஆசிய அணிகள் இந்த நான்கு நாடுகளில் விளையாட எப்போதுமே சிரமப்படுவார்கள். இதில், பஆஸ்திரேலியாவில் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் 47.28 ஆவரேஜ் வைத்திருக்கிறார். ஆனால், மீதமுள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் அவரது டெஸ்ட் ஆவரேஜ் 27.35 மட்டும் தான்.
தொடரும் நம்பிக்கை
இந்த நிலையில் தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி நிர்வாகம் அவர் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். புஜாரா மட்டும் அல்ல.. இந்த ஒன்றை மட்டும் அனைத்து வீரர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்பது மொத்தம் 5 போட்டிகளை கொண்ட தொடராகும். மிக நீண்ட டெஸ்ட் பயணம். இதுபோன்ற கடினமான தொடர்களில் ஒவ்வொரு வீரர்களின் உண்மையான திறன் வெளியாகும். அப்படி சாதித்து பெயர் வாங்கியவர்களும் உண்டு. காணாமல் போனவர்களும் உண்டு. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக அவர்களது நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடி, பல இந்திய வீரர்கள் அதற்கு பிறகு அணிக்கு திரும்பவே முடியாமல் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கின்றனர். இதனை, தற்போது விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும், மனதில் வைத்துக் கொள்வது சிறந்தது.