நான்காம் தேதி
இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்திய 'பி' அணி
இதற்கிடையில், ஜூலை மாதத்தில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முடித்துக்கொண்டு இந்திய அணி நேராக இலங்கை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியுடன் ஆடப்போவது இந்தியாவின் 'பி' அணி என தெரியவந்தது. இந்த போட்டியில் இளம் வீரர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ராகுல் டிவாட்டியா, ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
பயிற்சியாளரா?
இந்த சூழலில், இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய அண்டர்-19 அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர், இவரது பயிற்சியின் கீழ் 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது.
காத்திருக்கும் ராகுல்
2018 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டமும் வென்றது. ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், நாகர்கோட்டி, உள்ளிட்ட பல வீரர்கள் இவரது பிராடக்டுகளே. திறன் வாய்ந்த வீரர்களை கொக்கிக் போட்டுத் தூக்குவதில் கெட்டிக்காரரான டிராவிட், இந்திய அணிக்கும் பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஒருவேளை இலங்கைக்கு எதிரான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டால், அணி வீரர்களின் தேர்வில் தொடங்கி, பிளேயிங் லெவன் செலக்ஷன் வரை அனைத்தும் பக்காவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது விராட் கோலிக்கு பிடித்த ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் நிலையில், ராகுல் கோச்சாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.