நிலைகுலைய வைத்த ஜேமிசன்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ரிசர்வ் டே
இன்றைய நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக மழையால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, ஒருவேளை ஐந்து நாட்களில் முடிவு கிடைக்காவிடில் 'ரிசர்வ் டே (மாற்றுநாள்)' ஒதுக்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், ரிசர்வ் டே ஒதுக்கப்படுவது குறித்து இப்போதே முடிவு செய்யப்படாது. நாளைய கடைசி நாளின் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
மழை பெய்தால்
ஒருநாளைக்கு சராசரியாக 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். வெளிச்சமின்மை, மோசமான வானிலை, மழை குறுக்கீடு காரணமான ஆட்டம் தடைபட்டால், அடுத்த நாள் தடைபட்ட ஓவர்கள் கூடுதலாக வீசும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதாவது 90 ஓவர்களுக்குப் பதில் 105 ஓவர்கள் வரை வீசப்படும். இவ்வாறு அடுத்த நாள் ஒதுக்கப்பட்டு, கடைசி நாளில் ஆட்டம் முடியாமல், ஓவர்கள் வீச வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் 'ரிசர்வ் டே' ஒதுக்கப்படும்.
ஏகப்பட்ட ஓவர்கள் பாக்கி
அப்படி பார்த்தால், மூன்று நாட்களுக்கும் சேர்த்து வீசப்படாமல் இருக்கும் ஓவர்கள் 100-ஐ தாண்டி செல்வதால்,
ரிசர்வ் டே கட்டாயமாக ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. எனினும், நாம் முன்பே சொன்னது போல, நாளை ஐந்தாவது நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தான் இதுகுறித்து முடிவு செய்யப்படும். வருண பகவானே கொஞ்சம் கருணை காட்டப்பா!