மெல்போர்ன்: உலக கோப்பையை யார் வழங்குவது என்ற போட்டியில் ஐசிசி சேர்மன் சீனிவாசனிடம் தோற்ற, ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஸ்டேடியத்தை விட்டே வெளியேறிய நிலையில், ஐசிசி பற்றிய திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்துவேன் என்று முஸ்தபா கூறியுள்ளார்.
1996 உலக கோப்பைவரை, வெற்றி பெற்ற அணிகளுக்கு யாராவது ஒரு விஐபிதான் கோப்பையை அளித்து வந்தார். ஆனால் அதன்பிறகு ஐசிசி தலைவர் கோப்பையை வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஐசிசியில் தற்போது சேர்மன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரமிக்கவரான சீனிவாசன் அமரச் செய்யப்பட்டுள்ளார். இந்த சேர்மன் பதவில் உள்ளவர்களுக்குதான், ஐசிசியில் அதிக அதிகாரம் உண்டு.
காலிறுதி போட்டியில், இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவுக்கு வங்கதேச பவுலர் ருபேல் வீசிய பந்து நோபால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே பந்தில் அவர் கேட்ச்சும் கொடுத்தார். எனவே இந்தியாவின் நெருக்கடியால் நடுவர் அப்படி அறிவித்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஐசிசி தலைவர் கமால். இவர் வங்கதேசத்தின் அமைச்சராகவும் உல்ளதால், இப்பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பேட்டிகள் கொடுத்தார்.
இதனால் அதிருப்தியடைந்த சீனிவாசன், உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தனது கையால் கோப்பையை வழங்கினார். சீனிவாசன்தான் கோப்பையை வழங்க வேண்டும் என்று ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முஸ்தபா கமால் பரிசளிப்பு விழாவை புறக்கணித்து கிளம்பிவிட்டார்.
இந்நிலையில் முஸ்தபா, வங்கதேச செய்தி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், "உலக கோப்பையை ஐசிசி தலைவர்தான் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அதைமீறி நான் புறக்கணிக்கப்பட்டேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனது உரிமைகளுக்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது.
ஐசிசியில் நடைபெறும் நிகழ்வுகளை இந்த உலகம் அறிய செய்வேன். ஐசிசி கோல்மால்களுக்கு யார் காரணம் என்பதையும் தெரியப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.