மின்னல் வேக ஓட்டம்
முதல் இன்னிங்சின் 7 வது ஓவரின் போது, பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர். இருவரும் எதிர் திசையில் இருந்து நேருக்கு நேர் ஓடிவந்த போது, எதிர்பாராத விதமாக ஹஸ்னைன் காலில், டூப்ளசிஸ் தலை வேகமாக மோதியது.
ஒரு பகுதியே சிவந்துவிட்டது
இதனால், படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஹஸ்னைன் காலில் அவர் தலை மோதியில், ஒரு பகுதியே சிவந்துவிட்டது. எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், டு பிளசிஸ் சிகிச்சை முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்பிவிட்டார்.
விரைவில் களத்தில்
இதுகுறித்து அவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், ""எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் மீண்டும் குணமடைந்து வருகிறேன். சில நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன்" என்று டு பிளெசிஸ் ட்வீட் செய்திருந்தார்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
ஆனால், அவரது காயத்தின் வீரியம் அவரது சில நினைவுகளை மறக்கடிக்கும் அளவுக்கு சென்றிருப்பது டு பிளசிஸ் குடும்பத்தாரை ரொம்பவே வேதனைப்படுத்தி இருக்கிறது. இந்த நிலைமை, அவரது கிரிக்கெட் வாழ்ககைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சுகின்றனர். எனினும், காயம் கடுமையானதாக இருந்தாலும், அது நிவர்த்தி செய்யப்பட்டதால் தான் ஹோட்டல் அறைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லையெனில், அவர் குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் நினைவிழந்துவிட்டார் என்பது போல் கூறுவது தவறு என்றும், அவர் சில நியாபங்களை மட்டுமே தலையில் ஏற்பட்ட அதிர்வால் இழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. எதிர்காலத்தில் அவருக்கு மீண்டும் நினைவுகள் இழப்பது குறித்து எந்த சிக்கலும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து டு பிளசிஸ் மற்றும் அவரது குடும்பத்தார் கவலை கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.