இந்திய அணி தோல்வி
உலகக்கோப்பை தொடர்களின் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் இந்தியா ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்ற சாதனை இருந்தது. ஆனால் நேற்றைய தினம் அந்த சாதனை தகர்க்கப்பட்டது. இந்திய அணியின் இந்த சொதப்பலுக்கு காரணம் டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடாததே.
ரசிகர்கள் விமர்சனம்
குறிப்பாக ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அனைத்து அயல்நாட்டு அணிகளுடனும் சிறப்பாக விளையாடும் ரோகித் சர்மா, பாகிஸ்தானிடம் மற்றும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சீனியர் வீரராக நேற்று எந்தவித பதற்றமும் இன்றி விளையாடியிருக்க வேண்டிய அவர், அவுட்டானதே பின் வரிசை வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. எனவே இவரை முக்கிய போட்டிகளில் இனி சேர்க்கக்கூடாது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நிருபரின் சர்ச்சை கேள்வி
இந்நிலையில் இதற்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று போட்டி முடிந்த பிறகு கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ரோகித் சர்மாவை விட இஷான் கிஷான் ஓப்பனிங் சரியாக விளையாடுவார் என நினைக்கிறீர்களா? அடுத்த போட்டியில் ரோகித் வெளியேற்றப்படுவாரா என கேள்வி எழுப்பினார்.
கோலி பதில்
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கேப்டன் கோலி, சர்வதேச டி20 போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதா?.. நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா? பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா என்ன செய்தார் என்று நினைவு இருக்கிறதா? உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டுமென தோன்றினால், முன்கூட்டியே கூறிவிடுங்கள். நான் அதற்கேற்ப பதில் தருகிறேன் எனக்கூறினார்.
ரோகித்திற்கு நெருக்கடி
இந்திய அணியில் ஏற்கனவே ஓப்பனிங் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணியின் அடுத்த டி20 கிரிக்கெட் கேப்டனாக ரோகித் சர்மாதான் பதவியேற்க போகிறார். எனவே அடுத்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி செய்த தவறை திருத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.