மழையால் பாதிக்கப்பட்ட முதல்நாள் ஆட்டம்
4 மாத கொரோனா இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி சௌதாம்டனில் துவங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர இறுதியில் 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்களை எடுத்திருந்தது. முதல் நாளின்போது மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
204 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகளின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் 204 ரன்களில் சுருண்டது. மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஷனான் கேப்ரியல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
இந்த பெருமை போதாது
இதனிடையே, தனக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை மட்டும் போதாது என்று கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டரான அவர், இங்கிலாந்துக்கு எதிராக தான் 5 விக்கெட்டுகள் மற்றும் 100 ரன்களை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாகவும் முதல் இலக்கு தற்போது முடிந்துள்ளதாகவும், மேலும் 100 ரன்களையும் தான் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம்
கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த அணியை 2க்கு ஒன்று என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது. இந்நிலையில் கடந்த 1988க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை அந்த நாட்டில் வீழ்த்த முடியாத சாதனையை தற்போது நிகழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி தீவிர முனைப்புடன் உள்ளது.
முதல் முறையாக தேர்வு
இந்த தொடரில் பௌலர் ஸ்டூவர்ட் போர்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட்டை முதல் முறையாக இங்கிலாந்து அணி தேர்வு செய்துள்ளது. இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த போட்டியில் டாப்பில் உள்ளதாக மார்க் வுட் தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் செயல்பட வேண்டிய வழியையும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் காண்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.