விராட்டை புகழும் அக்தர்
முன்னாள் பாகிஸ்தான் பௌலரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சோயிப் அக்தர், 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும் 163 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 247 விக்கெட்டுகளையும் 15 டி20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவ்வப்போது கிரிக்கெட் குறித்த வீடியோக்களை வெளியிட்டுவரும் அவர் தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து வருகிறார்.
கோலி என்ஜாய் செய்திருப்பார்
இந்நிலையில், கிரிக் இன்போவிற்காக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகருடன் மேற்கொண்ட நேரலையில் பேசிய அக்தர், முன்னாள் பௌலர்கள் வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோருக்கு எதிராக விராட் கோலி விளையாடி இருக்க வேண்டும் என்றும், அந்த போட்டிகளை கோலியும் என்ஜாய் செய்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.
மைதானத்தில் எதிரிகள்தான்
தானும் விராட் கோலியும் ஒரே நேரத்தில் விளையாடியிருந்தால் மிகச்சிறந்த நண்பராக இருந்திருப்போம் என்றும் அவருக்கும் தனக்கு அதிகமான ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் அக்தர் கூறியுள்ளார். மேலும் இருவருமே பஞ்சாபிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறந்த நண்பர்களாக இருந்தாலும், மைதானத்தின் போட்டியின்போது சிறந்த எதிரிகளாகவே இருந்திருப்போம் என்றும் கூறியுள்ளார்.
ஜூனியரானாலும் மரியாதை
முதலில் விராட் கோலியின் தலைக்குள் சென்று, அவரால் தன்னை பௌலிங் செய்வதில் இருந்து கட் செய்யவோ, தள்ளி வைக்கவோ முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிடுவேன் என்றும் அக்தர் கூறியுள்ளார். விராட் கோலி தன்னைவிட மிகவும் ஜூனியராக இருந்தாலும் தான் அவருக்கு மிகச்சிறந்த மரியாதையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.