தோனி விடுப்பு
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்தியா ஆடிய எந்த கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. அவர் நீண்ட விடுப்பில் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வந்தது.
அணியில் வாய்ப்பு இல்லை
அதே சமயம், தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனியை தாண்டி இந்திய அணி வந்துவிட்டதாகக் கூறி, அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்கிற ரீதியில் கூறி இருந்தார்.
2020 ஐபிஎல்
நான்கு மாதங்கள் கடந்த நிலையில், தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது 2020 ஐபிஎல் தொடர் தான் தோனியின் கிரிக்கெட் வாழ்வில் முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போகும் தொடராக அமைந்துள்ளது.
மீண்டும் வாய்ப்பு
2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால், தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
கங்குலி பதில்
இது குறித்து இரு நாட்கள் முன் பேசிய கங்குலி, தோனி 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடுவது குறித்து முடிவு செய்ய நீண்ட காலம் உள்ளது என்று பதில் அளித்தார்.
தெளிவாக இருக்கிறது
மேலும், தோனி விவகாரத்தில் எல்லாம் தெளிவாக இருப்பதகாவும், பிசிசிஐ, தேர்வுக் குழு, தோனி இடையே வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் கூறி இருந்தார். சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது என்று கூறி மர்மமாகவும் பதில் அளித்து இருந்தார்.
பிசிசிஐ கூட்டம்
இந்த நிலையில், நேற்று பிசிசிஐ வருடாந்திர பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிசிசிஐ தலைவர் கங்குலி பல முக்கிய முடிவுகளை அறிவித்தார். அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கங்குலி தடாலடி பதில்
அப்போது தோனி 2௦20 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, "தயதுசெய்து தோனியிடம் கேளுங்கள்" என்று கூறினார்.
திடீர் மாற்றம்
இரண்டு நாட்களுக்கு முன்பு எல்லாம் தெளிவாக இருக்கிறது என்று கூறிய கங்குலி, தோனி அணிக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என்பது போலவும், இந்த விஷயத்தில் கோபத்தில் இருப்பது போலவும் தோனியிடம் போய் கேட்டுக் கேளுங்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
என்ன பிரச்சனை?
தோனி விவகாரத்தில் என்ன ரகசியம் நிலவுகிறது? கங்குலி ஏன் மாற்றி மாற்றி பேசி இருக்கிறார்? இரு நாட்களுக்குள் ஏதும் பிரச்சனை ஏற்பட்டதா? என பல கேள்விகள் எழுகின்றன. தோனி வெளிப்படையாக பேசினால் ஒழிய இதற்கு விடை கிடைக்காது.