நான்கு வீராங்கனைகள் முன்னிலை
நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் மட்டுமல்லாது இந்தியாவின் மிதாலி ராஜ் உட்பட நான்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், சர்வதேச டி20யில் ஆண்களை விட அதிக ரன்கள் குவித்துள்ளனர். ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தனி ஒரு வீரரின் அதிக பட்ச ரன்கள் 2271. நியூசிலாந்தின் மார்டின் குப்டில் இந்த சாதனையை செய்துள்ளார். ஆனால், இவரை விட நான்கு வீராங்கனைகள் டி20யில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
சூசி பேட்ஸ் 3000 ரன்கள் சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் 3007 ரன்களை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறார். 3000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையுடன், முதல் இடத்தையும் நீண்ட நாட்களாக தனதாக்கி வைத்துள்ளார் இவர்.
ஆண்களை விட அதிக ரன்கள்
பேட்ஸுக்கு அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெய்லர் 2732, இங்கிலாந்தின் எட்வர்ட்ஸ் 2605, இந்தியாவின் மிதாலி ராஜ் 2283 ரன்கள் எடுத்துள்ளனர். இவர்கள் நால்வரும் மார்டின் குப்டில்லை விட அதிக ரன்கள் குவித்தவர்கள்.
மகளிர் சராசரி அதிகம்
ஆடவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, மார்டின் குப்டில், ரோஹித் சர்மா, ஷோயப் மாலிக், பிரெண்டன் மெக்குல்லம், விராட் கோலி ஆகியோர் டி20யில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர். இவர்களில் கோலி தவிர்த்து மற்ற அனைவரும் 30 முதல் 35க்குள் தான் சராசரி வைத்துள்ளனர். மகளிர் கிரிக்கெட்டில் பேட்ஸ் 30.68, டெய்லர் 35.94, எட்வர்ட்ஸ் 32.97, மிதாலி ராஜ் 37.42 என சாராசரி வைத்துள்ளனர். மிதாலி, டெய்லர் இருவரும், ஆண்களை விட அதிக சராசரி வைத்துள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம்
இனிமேல், மகளிர் கிரிக்கெட்டை ஏளனமாக பார்க்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளனர் இந்த பெண்கள். இதுவரை மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரிய விளம்பரங்கள் செய்யாத ஐசிசி மற்றும் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் இப்போது மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் மகளிர் உலக டி20 கிரிக்கெட் தொடரை ஐசிசி முன்னிலைப் படுத்தி விளம்பரங்கள் செய்து வருகிறது.
உயர்வுக்கு டி20 தான் காரணம்
கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக ரசிகர்களை ஈர்க்க டி20 என்ற கிரிக்கெட் போட்டி முறை உருவானது. ஆனால், ரசிகர்களை தாண்டி அது மகளிர் கிரிக்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.