இந்தியா -ஆஸ்திரேலியா போட்டி
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுதாரித்த ஆஸ்திரேலியா
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஆஸ்திரேலியா -இலங்கை இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அந்த அணியின் ரேச்சல் ஹேய்ன்ஸ் அடித்த அரைசதத்தால் அந்த அணி, இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.
இலங்கையை சுருட்டிய ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் வீராங்கனை சமாரி அத்தப்பட்டு, 38 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஆயினும் ஆஸ்திரேலிய அணியின் பௌலர்கள் நிகோலா காரே மற்றும் மோலி ஸ்ட்ரானோ தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் ரன்னை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122ஆக சுருக்கினர்.
20 பந்துகளில் 3 வீராங்கனைகள் அவுட்
இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய துவக்க வீராங்கனைகள் ஆலிசா ஹீலி, ஆஷ்லெக் கார்ட்னர், பெத் மூனே ஆகியோர் 4 ஓவர்களில் அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து விளையாடவந்த ஹேய்ன்ஸ் மற்றும் கேப்டன் மெக் லேனிங் இருவரும் சுதாரித்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வழங்கி ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினர்.
அணியை காப்பாற்றிய கேப்டன்
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பௌலிங் சிறப்பாக இருந்தது. இதன்மூலம் 122 ரன்களுக்கு இலங்கையை அந்த அணி சுருட்டியது. ஆனால், பேட்டிங்கில் அந்த அணி சொதப்பியது. 20 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்து கதறிக் கொண்டிருந்த நிலையில் ஆபத்பாந்தவனாக, அணிக்கு கைக்கொடுத்து வெற்றியை நோக்கி இழுத்து சென்ற கேப்டன் மெக் லேனிங்கிற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.