ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது
ஐசிசி டி20 மகளிர் உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. வரும் 8-ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளில் மோதி தொடர் வெற்றி பெற்றுள்ளது.
17 ரன்களில் இந்தியா அபார வெற்றி
கடந்த வெள்ளிக்கிழமை இந்த தொடர் துவங்கிய நிலையில், முதல் நாளின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பௌலர்கள் சிறப்பாக பந்துவீச்சை அளித்து, இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தனர்.
2வது ஆட்டத்திலும் இந்தியா அபாரம்
இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையில் பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை சுவைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினர்.
வேதா கிருஷ்ணமூர்த்தி அபாரம்
போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 17 பந்துகளில் 39 ரன்களை குவித்து இந்தியாவின் துவக்கத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களை அடித்த நிலையில், வேதா கிருஷ்ணமூர்த்தி 11 பந்துகளில் அதிரடியாக 20 ரன்களை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள்
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனியா பாட்டியா உள்ளிட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறிய போதிலும், ஷபாலி, வேதா உள்ளிட்டவர்களின் பங்களிப்பில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை அடித்திருந்தது. எதிரணி பௌலர்கள், சல்மா காத்தூன், நஹிதா அக்தர் உள்ளிட்டவர்களும் சிறப்பாக பந்துவீசினர்.
இந்தியா சிறப்பான பௌலிங்
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச வீராங்கனைகள் முர்ஷிதா காத்தூன், நிகர் சுல்தானா முறையே 30 மற்றும் 35 ரன்களை அடித்து அந்த அணிக்கு சிறப்பான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும், இந்திய பௌலர்கள் குறிப்பாக பூனம் யாதவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து அந்த அணியின் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் 124 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம்
வங்கதேசத்திற்கு எதிரான இந்த போட்டியில் இந்தியாவில் பௌலர்கள் வழக்கம்போல சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். குறிப்பாக பூனம் யாதவ், வங்கதேச வீராங்கனைகள் சஞ்சிதா இஸ்லாம், பஹிமா காத்தூன் மற்றும் ஜஹனாரா ஆலம் ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். இதன்மூலம் இந்தியாவின் வெற்றி எளிதாக அமைந்தது.
வேதா கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு
இந்நிலையில், இந்தியாவின் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்திய வீராங்கனைகள் ஷபாலி மற்றும் ரிச்சாவின் ஆட்டம், இந்திய அணிக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த கவுர், ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி அடித்த 20 ரன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தயாராகும் இந்திய மகளிர்
இந்நிலையில் வரும் 27ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி, மெல்போர்னின் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இந்திய மகளிர் தீவிர பயிற்சியுடன் தயாராகி வருகின்றனர். நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் இந்திய ஆடவர் அணி சொதப்பிவரும் நிலையில், நெருக்கடிகள் ஏதுமின்றி விளையாடி வரும் இந்திய மகளிர், இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.