மும்பை: கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து, 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இணைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது. அதில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், அது குறித்த தகவல்களும் எழுந்து வந்தன.
இந்நிலையில் 2022ம் ஆண்டு காமன்வெல்தில் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டி இணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமான அதற்கான அறிவிப்பை இந்த அமைப்புகள் வெளியிட்டு இருக்கின்றன.
அதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து போட்டிகளும் பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1998ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் (ஆடவர் பிரிவு) இடம் பெற்றிருந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா தங்கம் வென்றது. அதன்பிறகு தற்போது தான்.. அதாவது 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.