டாஸ் வென்ற ஆஸி.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்ததால், இந்த முடிவை எடுத்தது ஆஸ்திரேலிய அணி. எனினும், இந்திய அணி வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா துவக்கத்தில் அதிரடியாக ரன் சேர்த்தனர்.
ஷபாலி வர்மா அதிரடி
ஷபாலி வர்மா 15 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து மிரட்டினார். 5 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். மந்தனா 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
நிதான ஆட்டம்
47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், இந்திய அணி நிதான ஆட்டத்துக்கு மாறியது. ரோட்ரீகஸ் 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. தீப்தி சர்மா மறுபுறம் சிறப்பாக ரன் சேர்த்தார்.
இந்தியா ஸ்கோர்
அவர் 46 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். வேதா கிருஷ்ணமூர்த்தி 9 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 133 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
அலிசா ஹீலி அதிரடி
ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீராங்கனை அலிசா ஹீலி அதிரடியாக ரன் சேர்த்து அசத்தினார். 35 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். மூனி 6, மெக் லேனிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
115 ரன்களுக்கு ஆல் அவுட்
கார்ட்னர் சிறிது நேரம் தாக்குப் பிடித்து 34 ரன்கள் சேர்த்தார். எனினும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளித்து ஆடவில்லை. ஒன்பது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.
ஆஸி. திணறல்
இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் பூனம் யாதவ், சிக்ஷா பாண்டே சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தனர். இருவரும் சேர்ந்து 7 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பூனம் யாதவ் 4 விக்கெட்கள்
பூனம் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். சிக்ஷா பாண்டே 3.5 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த சுழற் பந்துவீச்சு கூட்டணியிடம் சிக்கியது ஆஸ்திரேலியா.
சுழற் பந்துவீச்சு தாக்கம்
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றியுடன் துவக்கி உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் சுழற் பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது இந்திய மகளிர் அணி.