குடும்பத்தினருக்கு அனுமதி மறுப்பு?
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூஏஇயில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐபிஎல்லின் 8 அணிகளும் வரும் 15ம் தேதி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு குடும்பதினர் உடன் செல்ல அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.
அஜிங்க்யா ரஹானே கருத்து
இந்நிலையில் குடும்பத்தினரின் பாதுகாப்பு தான் முக்கியமானது என்றும் இந்த சூழ்நிலையில் யூஏஇக்கு குடும்பத்தினரை உடன் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதி மறுத்தாலும் அதுகுறித்து கவலை இல்லை என்று அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவி மற்றும் மகளின் பாதுகாப்பு குறித்து தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
5 மாதங்களாக நேரம் செலவழிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழலில் உடன் விளையாடும் வீரர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும் ரஹானே கூறியுள்ளார். இந்தியா டுடேவின் இன்ஸ்பிரேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரஹானே, கடந்த 4 -5 மாதங்களாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்த நிலையில், தற்போது அவர்களை பிரிந்து செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உற்சாகமாக உள்ளதாக கருத்து
இதுகுறித்து அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ எடுக்கும் முடிவு முக்கியமானது என்றும் ரஹானே கூறியுள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளது மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் மேலும் பல அனுபவங்களை தான் பெற முடியும் என்றும் தன்னுடைய ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் ரஹானே கூறினார்.