நிலைகுலையும் வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்த்தால் மிகுந்த பகட்டுடன் உல்லாசத்துடன் இருப்பதாக காட்சியளிக்கும். ஆனால் அடுத்தடுத்த தொடர்கள், ஓய்வில்லாத பயிற்சிகள் மற்றும் தொடர் பயணங்கள் அவர்களை மனதளவிலும் உடலளவிலும் நிலைக்குலைய வைத்து வருவதாக விராட் கோலி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
முன்னதாக அறிவுறுத்திய கோலி
ஐபிஎல்லில் அதிகப்படியான போட்டிகளை விளையாட நேர்வதாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாகவே விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் 2019 உலக கோப்பை போட்டியில் இடம்பெறும் நோக்கத்துடன் அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் பங்கேற்று ஆடினர். தொடர்ந்து பல்வேறு தொடர்களிலும் பங்கேற்றனர்.
கோலியின் தொடர் குற்றச்சாட்டு
கடந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும் இதே கருத்தை கேப்டன் விராட் கோலி பதிவு செய்திருந்தார். தொடர் போட்டிகள் காரணமாக வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல் முறையாக நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஆலோசிக்க பிசிசிஐ திட்டம்
இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் வீரர்களின் பணிச்சுமை குறித்து ஆலோசித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்பு இரானி கோப்பை தொடரின்போது வீரர்களின் பணிச்சுமை மற்றும் மருத்துவம் சார்ந்த தரவுகளை கொண்டு இதுகுறித்து ஆலோசிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ உருக்கம்
இந்நிலையில் ஐபிஎல்லில் வீரர்களின் தொடர் போட்டிகள் குறித்து ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா மற்றும் இஷாந்த் சர்மா போன்றவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஆயினும் ஐபிஎல் அணிகளை இந்த விவகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.
பிசிசிஐ முடிவு
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக அணியின் வீரர்களுக்கு தேசிய அணியின் பிசியோவிடம் இருந்து ஆலோசனை பெற வழிவகுக்கப்படும் என்றும் வீரர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் அவர்களின் உடல்நலம் குறித்தும் அறிவுரை வழங்கும் வகையில் இந்த ஆலோசனை இருக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.